தமிழ் சினிமாவில் இப்போது மிக பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் `போர் தொழில்' பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வந்த `கர' படத்தின் ஷூட் முடிந்துவிட்டது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் `D55' படத்தில் நடிக்க இருக்கிறார். மம்மூட்டி, ஸ்ரீ லீலா, சாய் பல்லவி எனப் பலர் நடிக்கும் இப்படத்தை தயாரிக்க உள்ளதும் தனுஷ் தான்.
இதற்கு அடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் `D56' படத்தில் என சொல்லப்பட்டது. ஆனால், இடையில் ஹெச் வினோத் இயக்கும் படத்தில் தனுஷ் நடிப்பார் என்ற தகவல்கள் கிளம்பியது. மேலும், நீங்கள் எப்போது சொன்னாலும் அந்தப் படத்திற்கு வந்துவிடுகிறேன் என சொன்னதாகவும் கூறப்பட்டது. இந்த கேப்பில் மாரி செல்வராஜ் இன்பன் உதயநிதி நடிக்கும் படத்தை இயக்குவார் என்ற திட்டங்கள் இருந்தது. ஆனால், இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு, முதலில் இருந்தது போல தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி தான் இணைய உள்ளதாம்.
இந்தப் படத்தின் முழு ஸ்க்ரிப்ட்டையும் இன்னும் சில நாட்களில் முடித்துவிட்டு தனுஷிடம் கொடுக்க இருக்கிறார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறார்கள். படத்தில் தனுஷுக்கு ஒரு கெட்டப் சேன்ஜ் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக தனுஷ் நடிக்கும் படங்களுக்கு 3- 4 மாதங்கள் தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால், மாரி செல்வராஜுக்கு 6 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று மாரி - தனுஷ் இதற்கு முன் இணைந்து செய்த `கர்ணன்' படத்தை பார்த்த தனுஷ், இவ்வளவு அருமையான படம் என்பதை நான் முன்பே உணர்ந்திருந்தால், இன்னும் நிறைய ஈடுபாடு காட்டி நடித்திருப்பேன் எனக் கூறியதாக மாரி செல்வராஜ் கூறி இருப்பார். எனவே, இந்தப் படத்தில் முழுமையாக ஈடுபாட்டைக் கொடுக்க அதிக நாட்களை தனுஷ் ஒதுக்குகிறார் என எடுத்துக் கொள்ளலாம்.
இரண்டாவது விஷயம் இது ஒரு பீரியட் படமாக உருவாக உள்ளது. இப்படத்தைப் பற்றி சமீபத்தில் ஒரு மேடையில் கூறிய மாரி செல்வராஜ் "முதன் முறையாக நான் ஒரு ஃபேண்டஸி படத்தை எடுக்கிறேன். ஃபேண்டஸியும் அரசியலும் கலந்த பீரியட் படமாக இருக்கும். இந்த பிரிவினைகள் எல்லாம் எங்கு துவங்கி இருக்கும்? அங்கேயே போய் இதனை முடித்தால் எப்படி இருக்கும்? `பரியேறும் பெருமாள்', `கர்ணன்', `மாமன்னன்', `வாழை', `பைசன்' இந்தக் கதைகள் எல்லாம் துவங்கிய புள்ளி ஒன்று இருக்குமல்லவா. அந்தப் புள்ளியை ஒருவன் கண்டுபிடித்து, அப்போதே அதை மாற்றி இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் களம். இந்தக் கதையை சொன்னதுமே, இந்தப் படம் உங்களுக்கும், எனக்கும் பெரிய படமாக இருக்க வேண்டும் என தனுஷ் சார் கூறினார். அப்படியான ஒரு படமாக இருக்கும்." என்றார். எனவே பீரியட் படத்திற்கு நாட்கள் அதிகம் தேவைப்படும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ தனுஷின் அடுத்த படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான்.