லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படமான ‘லீடர்’ குறித்து இசை வெளியீட்டில் பேசும்போது, உலகப் போர்கள் நிற்க இறைவனை வேண்டினார். ஜிப்ரான் இசை, வெற்றிமாறன்-தனுஷ் பாராட்டு ஆகியவை படத்துக்கு நம்பிக்கையை கூட்டியதாகவும், ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போல பிளாக்பஸ்டர் ஆகும் திறன் ‘லீடர்’க்கு உண்டு எனவும் கூறினார்.
லெஜண்ட் சரவணன் நடிப்பில் துறை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `லீடர்'. இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய நடிகர் லெஜெண்ட் சரவணன் "உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், இந்த போர் நிறுத்தப்பட்டு மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். எனது இரண்டாவது படமான 'லீடர்', வருகிற ஏப்ரல் 3ம் தேதி (புனித வெள்ளி) அன்று வெளியாகிறது.
இந்தப் படத்தின் கதை ஒரு அப்பா, மகள் வாழ்க்கை சந்தோஷமாக போகும் போது, திடீரென அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய கேங்க்ஸ்டர் உள்ளே வருகிறார். அதன் பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார். இன்னும் சொல்வதென்றால், தன்னை முழுமையாக அர்ப்பணித்து இப்படத்தைச் செதுக்கியுள்ளார். இப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அரை மணி நேரம் போனில் இயக்குநரை பாராட்டியுள்ளார். இந்தப் படத்தில் குத்து பாடல்கள் எதுவும் கிடையாது. எல்லாம் படத்துடன் இணைந்து பயணிக்கும் வகையில் மிகச்சிறப்பாக வந்துள்ளன.
இந்தப் படப்பிடிப்பில் இரண்டு இடங்கள் மிக சவாலாக இருந்தது. ஒன்று ஜார்ஜியா ஏர்போர்ட்ட்டில் பகல் நேரத்திலேயே -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் மரத்துப் போகும் சூழலில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். எல்லோரும் சிரமப்பட்டு வேலை செய்து, அந்தக் காட்சி படத்தில் மிக அழகாக வந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் குறுகலான ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், ஆயிரக்கணக்கான டெக்னிஷியன்கள் காத்திருப்பதால், ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடித்தேன். அந்த எனர்ஜி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. கேமரா ரோல் ஆக்ஷன் என சொன்னதும், அடுத்த நிமிடமே ஃபயர் தான்.
இப்படத்தை அண்மையில் பார்த்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிரம்மாண்டமாக இருப்பதாகப் பாராட்டினர். எங்கள் படக்குழுவுக்கும் சரி எனக்கும் சரி இந்தப் படத்தின் மேல் நிறைய நம்பிக்கை இருக்கிறது. `ஜெயிலர்', `விக்ரம்', `லியோ' போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் 'லீடர்' படமும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு அத்தனை தகுதியும் இந்தப் படத்துக்கு உள்ளது. இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு வசனம் உள்ளது. அதனை பேசி என் பேச்சை நிறைவு செய்கிறேன், 'கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை நல்ல மனிதர்கள் மூலமாகவே செய்கிறார். அவர்களை நம்புங்கள், என்னையும் நம்புங்கள்'" என்றார்.