அட்லீ படம் மூலமா சாய் Pan India படம் பண்றார், உங்களுக்கு ஆர்வம் இல்லையா? - ஜி வி பிரகாஷ் சொன்ன பதில்
ஜி வி பிரகாஷ், ஸ்ரீ கௌரி ப்ரியா நடிப்பில் உருவான படம் `ஹேப்பி ராஜ்'. இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பாதிப்பு கடந்த வாரம் வெளியானது. தெலுங்கில் இப்படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஜி வி பிரகாஷ்.
’மற்ற இசையமைப்பாளர்களுடன் நட்பு எப்படி இருக்கிறது, புது இசையமைப்பாளர்கள் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்’ எனக் கேட்கப்பட, "அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை, ஏர்போர்ட்டில்தான் சந்திப்போம். ஆனால் பாடல்கள் நன்றாக இருந்தால் பாராட்டிக் கொள்வோம். நான், அனிருத், தனுஷ் எல்லாம் ஒன்றாக கிரிக்கெட் விளையாடும் கேங். தமன் என் நல்ல நண்பர். சாய் எனக்கு ஆரம்ப காலகட்டங்களில் எனக்கு கால் செய்து சில ஆலோசனைகள் கேட்பார். அவரது அப்பா திப்பு என்னுடைய நண்பர் என்பதால் அழைப்பார். முதல் பாடலை வெளியிடும் முன்பு மிக்ஸ் எப்படி இருக்க வேண்டும், எது சரியாக இருக்கிறது, எது சரியாக இல்லை என்பதை எல்லாம் திப்பு கேட்பார். நானும் எனது எண்ணங்களைச் சொல்லுவேன்." என்றார்.
அட்லீ இயக்கும் படத்தின் மூலம் பேன் இந்தியா படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அப்யங்கர். அப்படியான படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இல்லையா? என்றதும், "எனக்கு Pan India என்பதில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஸ்க்ரிப்ட்தான் முதன்மை. இந்தியில் யாமி கௌதம் நடிக்கும் Nayi Naveli என்ற படம் செய்கிறேன், தெலுங்கில் ரவி தேஜாவின் `இருமுடி', துல்கரின் `ஆகாஷம்லோ ஒக்க தாரா', மலையாளத்தில் மோகன்லால் சார் படம், தமிழில் தனுஷ், சூர்யா படங்கள் என அந்தந்த மொழிக்கு தனித்தனியாகச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். Pan India என்பது என்ன என்றே எனக்குப் புரிவதில்லை. இப்போது நான் செய்யும் பணிகள் எனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கிறது. அதில் சில படங்களுக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. மூன்று நான்கு மொழிகளுக்கு ஒரே படத்தின் இசையமைப்பது பற்றி எனக்கு ஆர்வம் இல்லை. நல்ல கதைகளுக்கு இசையமைக்கிறேன், அது என்னைத் தேசிய அளவிலான கவனத்துக்கு எடுத்துச் சென்றாலே போதும்” என்றார்.
சூர்யா நடித்துள்ள `விஸ்வநாத் & சன்ஸ்' படம் பற்றி கூறுகையில், "அந்தப் படத்தில் இன்னும் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது, டீசரில் கொஞ்சமே காட்டி இருக்கிறோம். நான் ஸ்கூல் படிக்கும்போது `கஜினி', `காக்க காக்க' படங்களை ரசித்திருக்கிறேன். அவர் இன்னும்கூட இளமையாகத்தான் இருக்கிறார். இந்தப் படத்தில் அவரது ரசிகைகளுக்குப் பிடித்த ஒரு சூர்யாவாக திரும்ப வருகிறார். `லக்கி பாஸ்கர்' படத்துக்குப் பிறகு நான்தான் சூர்யா சாரிடம் `வெங்கி உடன் ஒரு படம் செய்யுங்கள்' என்றேன். இப்படம் நடந்ததில் என் பங்கும் இருக்கிறது" என்றார்.

