நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வந்திருந்தது. ஆனால், வேறு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இன்று காலை லைகா நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் ஒரு பதிவொன்றை வெளியிட்டிருந்தது. இன்று மாலை 5 மணிக்கு அடுத்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகிறது. இதற்கான மோஷன் போஸ்டரைத்தான் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
“எங்கள் தயாரிப்பு நிறுவனம் எப்போதும் நல்ல கதைசொல்பவர்களை ஊக்குவிக்கும். ஜேசன் சஞ்சய் அந்த கதையை சொல்லியபோது நாங்கள் புதியதாக உணர்ந்தோம், அத்தனையும் தாண்டி, இதில் பேன் இந்திய கவனத்தினை ஈர்க்கும் அம்சம் இருந்தது. படத்தின் கரு ‘நீங்கள் இழந்ததை அந்த இடத்திலேயே தேடுங்கள்’ என்பதைச் சுற்றி அமைந்துள்ளது” என லைகாவின் தமிழ் குமரன் சமீபத்தில் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2025 ஜனவரியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.