ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது.
முதல் பாகம் போலவே இந்த பாகத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 173 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. உலக அளவில் முதல் நாள் வசூல் 247 கோடி. முதல் வார இறுதியில் மட்டும் உலகளவில் பிரமிக்க வைக்கும் வகையில் ரூபாய் 761 கோடி வசூலித்துள்ளது. வசூல் மட்டுமின்றி ஷங்கர், ராஜமௌலி போன்ற பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது படம்.
இப்படத்தை தற்போது பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் "என்ன ஒரு படம்! பாக்ஸ் ஆபீஸின் தந்தை. ரன்வீர் சிங்கிற்கும், மொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த பாராட்டுக்கு நன்றி சொல்லி பதிவிட்ட இயக்குநர் ஆதித்யா தர் "நாங்கள் வளர்ந்த காலத்தில் பொழுதுபோக்கு என்றால் அது நீங்கள் தான். பல தசாப்தங்களாக எங்களை விசில் அடிக்க வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்தவர் நீங்கள். இன்றும் அதே ஸ்வாக் உடனும், அழகிய கிரேஸுடனும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். இது மாயாஜாலம் தான். நீங்கள் 'துரந்தர் 2' படத்தை 'மஸ்ட் வாட்ச்' என்று அழைப்பது, என் வாழ்க்கையின் மிகப் பெரிய 'சூப்பர் ஸ்டார்' தருணமாக உணர்கிறேன். இது, நம் அனைவரையும் பெரிய கனவுகளை காணக் கற்றுத் தந்த அந்த மனிதரிடமிருந்தே கிடைத்த ஆசீர்வாதம் போல் இருக்கிறது. ஜெய் ஹிந்த்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.