$6 பில்லியன் நிதி விடுவிப்பு பின்னணி என்ன..? ஈரான்-அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை!
ஈரான்-அமெரிக்கா இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்த முயற்சியின் பகுதியாக, சுவிட்சர்லாந்தில் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் அணுசக்தித் திட்ட கட்டுப்பாடு, லெபனான் போர்நிறுத்தம், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா பதற்றம் குறைப்பு போன்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன. இதற்குப் பதிலாக, கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளில் முதல் தவணையாக 6 பில்லியன் டாலர் மனிதாபிமான நிதி விடுவிப்பை அமெரிக்கா பரிசீலிக்கிறது.
செய்தியாளர் - m.மீரா
ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதையடுத்து, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதாவது அமெரிக்காவும் ஈரானும் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக ஈரானியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். இன்று நடைபெறவுள்ள இச்சந்திப்புகள், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தற்போதைய இடைக்கால ஒப்பந்தத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மேலும் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின்போது, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் குறித்து அமெரிக்காவும், ஈரானும் அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளன என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி மற்றும் எண்ணெய் துறை அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேவேளையில், அமெரிக்கத் தரப்பில் வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் கத்தார் நாட்டு மத்தியஸ்தர்களும் பங்கேற்றனர்.
சுவிட்சர்லாந்துக்குப் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய வான்ஸ், "ஈரானியர்கள், பாகிஸ்தானியர்கள் மற்றும் கத்தாரியர்களுடன் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஆவலாக உள்ளேன்... அணுசக்தி விவகாரம் மற்றும் லெபனான் போர்நிறுத்த விவகாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண நாங்கள் நம்புகிறோம்; இவைதான் நாங்கள் முக்கியமாகக் கவனம் செலுத்தவிருக்கும் இரண்டு பெரிய விஷயங்கள்," என்று கூறினார்.
இதற்கிடையே 'ஆக்சியோஸ்' (Axios) வெளியிட்ட செய்தியின்படி, ஈரானுடனான இந்தப் பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் ஒரு முக்கிய முடிவை எட்ட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. அதாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு இலக்கான இடங்கள் உட்பட, ஈரானின் அணுசக்தி நிலையங்களைப் பார்வையிட ஐ.நா. ஆய்வாளர்களுக்கு அனுமதி பெறுவதே அந்த இலக்காகும்.
இதற்குப் பதிலாக, கத்தாரில் உள்ள கணக்கில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களில் முதல் தவணையாக 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை விடுவிப்பது குறித்து வாஷிங்டன் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்தத் தொகை மனிதாபிமான அடிப்படையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கத்தாரின் வசம் உள்ள ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முடக்கப்பட்ட நிதியானது, ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகத் தங்களுக்குத் திருப்பித் தரப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

