பாலியல் குற்றச்சாட்டு | பட்டத்தை இழந்த பிரிட்டன் இளவரசர்.. அடுத்து என்ன?
பிரிட்டன் மன்னா் சாா்லஸின் இளைய சகோதரா் ஆண்ட்ரூவிடம் (65) இருந்து அவரின் இளவரசா் பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 2வது மகனாகப் பிறந்தவர் ஆண்ட்ரூ (65). இவர், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடா்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இதை ஆண்ட்ரூ மறுத்து வந்தார். இடையில் இந்த விவகாரம் பூதாகரமாய் வெடித்தபோது, ‘அரசுப் பட்டங்களைத் துறக்கிறேன்; என்மீதான குற்றச்சாட்டுகள் மன்னர் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளுக்கு இடையூறாக உள்ளன. எனவே பொது வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன்’ எனத் தெரிவித்தார்.
இது, மேலும் தீவிரமடைந்த நிலையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான அவரது உறவு குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக மன்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோதரர் இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரசுப் பட்டங்கள் மற்றும் சலுகைகளை பறிப்பதற்கான முறைப்படி நடவடிக்கையை தொடங்கி உள்ளார். அவருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.
மேலும் ஆண்ட்ரூவின் வின்ட்சர் இல்லத்தை காலி செய்யுமாறு பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அரண்மனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, பட்டங்கள் மற்றும் கவுரவங்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இப்போதிலிருந்து அவர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது; அவர் மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்வார்” என கூறப்பட்டுள்ளது.
மன்னர் சார்லசின் இந்த உத்தரவின் பேரில், இளவரசர் ஆண்ட்ரூ கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரீஸ் ஹாம் எஸ்டேட்டில் உள்ள மாற்று தனியார் தங்குமிடத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவ்வளவு மோசமான குடியிருப்பு அல்ல. இது 8,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மேலும், இது கிறிஸ்துமஸ் உட்பட குடும்ப நிகழ்வுகளை நடத்த பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சாண்ட்ரிங்ஹாம் ஒரு காலத்தில் ராணி எலிசபெத்தின் பிரியமான ஓய்வு விடுதியாக இருந்தது, இப்போது மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலாவின் விருப்பமான இடமாக உள்ளது.
மேலும், ஆண்ட்ரூ தனது அனைத்து பட்டங்களையும் இழக்கிறார். இதில் இளவரசர், டியூக் ஆஃப் யார்க், ஏர்ல் ஆஃப் இன்வெர்னஸ், பரோன் கில்லிலேக் ஆகியவையும் அடங்கும். இனி, அவருக்கு ஹிஸ் ராயல் ஹைனஸ் என்று அழைக்கப்பட மாட்டாது. ஆர்டர் ஆஃப் தி கார்டர் மற்றும் நைட் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி விக்டோரியன் ஆர்டரின் பட்டங்களும் நீக்கப்படும். இது, இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை அகற்றவும் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்ட்ரூவுக்கு பட்டங்கள் பறிக்கப்பட்டாலும், அரண்மனையில் இருந்து விரட்டப்பட்டாலும், அவர் அரச குடும்பமாக இருப்பதன் இரண்டு சலுகைகளைத் தக்க வைத்துக் கொள்வார் எனக் கூறப்படுகிறது. ஒன்று அவரது வாரிசுரிமை. அவரை வாரிசுரிமையிலிருந்து நீக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் சட்டம் தேவைப்படும். மேலும், கனடா உட்பட சார்லஸ் மன்னராக உள்ள 14 பிற நாடுகளின் ஒப்புதலும் இதற்கு தேவைப்படுகிறது. மற்றொன்று, ஆண்ட்ரூ இன்னும் ஆணையில் ஓர் அரசு ஆலோசகராகவே உள்ளார். அரசு ஆலோசகர்கள், பிரிவி கவுன்சில் கூட்டங்களில் கலந்துகொள்வது, வழக்கமான ஆவணங்களில் கையொப்பமிடுவது மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான புதிய தூதர்களின் நற்சான்றிதழ்களைப் பெறுவது போன்ற இறையாண்மையின் பெரும்பாலான அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்ய அதிகாரம் பெற்றுள்ளார். இருப்பினும், 2022ஆம் ஆண்டு சட்டம், மாநில ஆலோசகர்கள் அரச குடும்பத்தின் செயல்பாட்டு உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவதால், ஆண்ட்ரூ அதில் தொடர முடியாது என்றும் கூறப்படுகிறது.
அரச குடும்ப நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்ட்ரூ நிகழ்வுகள் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவார். ஏற்கெனவே அவர் அரச நிகழ்வுகளுக்கு அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போது பதவிகளை இழந்த ஆண்ட்ரூ, ஒருகாலத்தில் துணிச்சலான கடற்படை அதிகாரியாக பணியாற்றியவர். 1980ஆம் ஆண்டுக்கு முன்பு அர்ஜென்டினாவுடன் நடந்த பால்க்லாந்து போரின் போது ராணுவத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரிட்டிஷ் இளவரசர் அல்லது இளவரசி அந்தப் பட்டத்தை இழப்பது கிட்டத்தட்ட முன்னெப்போதும் இல்லாதது. இது கடைசியாக 1919ஆம் ஆண்டு நடந்தது, இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் எர்னஸ்ட் அகஸ்டஸ், முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனியுடன் இணைந்து செயல்பட்டதற்காக தனது பிரிட்டிஷ் பட்டத்தை இழந்தார் என்று கூறப்படுகிறது.

