ஈரானுக்கு உதவ வந்தால் அவ்வளவுதான்.. மீண்டும் சீனாவுக்கு 50% வரி..? அதிரடி காட்டுவாரா ட்ரம்ப்!
ஈரான்-அமெரிக்கா மோதலை தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் நடத்திய முயற்சியால் இருவார போர் நிறுத்தம் அமலானது. ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் போர் வெடிக்கும் அச்சம் நிலவுகிறது. இதே நேரத்தில், போர் நிறுத்த காலத்திலேயே சீனா ஈரானுக்கு ஆயுதம் அனுப்பியதாக தகவல் வெளியாக, டிரம்ப் 50% கூடுதல் வரி விதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரானுக்கும் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் நடைபெற்று வந்த மோதல் 1 மாதத்தை தாண்டியும் நடைபெற்று வந்தது. இந்த நாடுகளுக்கு இடையே எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்து அதற்கான வேலைகளையும் தொடங்கின.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் உள்ளே வந்த பாகிஸ்தான், அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு தரப்பிடமும் பேசி இரண்டு வாரகால போர் நிறுத்தத்தை கொண்டுவந்தது. தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்காவின் பிரநிதிகள் கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்கள்.
ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் போர் தொடங்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே இந்தப்போர் நிறுத்தத்தின் போது சீனா ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பியதாக செய்திகள் வெளியானது.
இந்த அமைதி நிறுத்தம் அறிவிக்கும்போதே அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு ஆயுதங்களை அளிக்கும் நாடுகளுக்கு 50 சதவீத வரி விதிப்பேன் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், ஈரானுக்கு சீனா ஆயுதங்களை அனுப்பியதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த நாட்டின் மீது டிரம்ப் கூடுதல் வரி விதிப்பாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒருவேளை மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவுக்கு கூடுதல் வரிகள் விதித்தால், அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது கூடுதல் வரிகளை விதிக்கும். இதனால் மீண்டும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் என பலரும் எச்சரிக்கை விதித்து வருகின்றனர்.

