வாரிசுகள் இருந்தபோதும், ரூ 10,80,000 கோடி சொத்தை அறக்கட்டளைகளுக்கு கொடுத்த தொழிலதிபர்... யார் அவர்?
பங்குச்சந்தையின் காட் ஃபாதர் (GOD FATHER) என அறியப்படுபவர். மிகவும் எளிமையானவர். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பலருக்கும் மிகவும் பிடித்தமானவர்.
DON'T GREED... DON'T PANIC...
இதுதான் இவரின் தாரக மந்திரம்...
சம்பாதித்து சம்பாதித்து அறக்கட்டளைகளுக்கு தானமளிக்கும் உலகப்பெரும் பணக்காரர் வரிசையில் இருப்பவர்.
இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் வாரன் பஃப்பட்...!
93 வயதான வாரன் பஃப்பட், தனக்கு பிறகு தனது சொத்துகளை யார் நிர்வகிக்கப் போகிறார்கள் என உயில் எழுதி வைத்துள்ளார். அவர் உயில் எழுதுவது இது முதல் முறையல்ல. பலமுறை உயிலை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார் பஃப்பட். உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளார், BERKSHIRE HATHWAY நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வாரன் பஃப்பட்.
சமீபத்தில் பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும் மேலும் 3 அறக்கட்டளைகளுக்கும் 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 44,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளார் பஃப்பட். என் இறப்பிற்குப் பிறகு கேட்ஸ் அறக்கட்டளைக்கு நிதியுதவி வழங்கப்படாது எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், பஃப்பட் அந்த அறக்கட்டளைக்கு எவ்வளவு நிதியுதவி வழங்கியிருக்கிறார் தெரியுமா?
3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய்.
இதை அந்த அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரியே தெரிவித்திருக்கிறார் பெருமையுடன்.
வாரன் பஃப்பட்டிற்கு, சூசி, ஹோவி மற்றும் பீட்டர் என 3 பிள்ளைகள் உள்ளனர். மூத்த குடிமக்களான 3 பேருமே தனித்தனியாக அறக்கட்டளைகளை நிர்வகித்து வருகின்றனர். இந்த அறக்கட்டளைகள் மூலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, கல்வி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் சேவைகள் வழங்கி வருகின்றன.
பஃப்பெட்டிடம் எஞ்சியிருக்கும் 10 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் யாருக்குச் சேரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எஞ்சியிருக்கும் அனைத்து சொத்துகளையும் ஒரு புதிய அறக்கட்டளைக்கு உயில் எழுதி வைத்திருப்பதாகவும், அதனை அவரது பிள்ளைகள் கண்காணிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
எனவே எந்த பரோபகார நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவரின் 3 பிள்ளைகள்தான் முடிவு செய்ய வேண்டும். பஃப்பெட்டின் இந்த முடிவினால் பங்குகளின் விலை, அரசியல், சமூகநலன் உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவரின் மகன் பீட்டர் தெரிவித்துள்ளார். அறக்கட்டளைகள் மூலம் தாங்கள் செய்து வரும் பணிகளின் தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பிருப்பதாக மற்றொரு பிள்ளையான சூசி கூறியுள்ளார்.
இளமைபருவத்தில் எளிமையாக வாழ்க்கையை தொடங்கிய பஃப்பட், வார இதழ்களை வீடுவீடாக சென்று விற்பனை செய்து வந்தவர். பள்ளிப் பருவத்திலேயே மளிகைக்கடையில் பணி, செய்தித்தாள் டெலிவரி, கோல்ஃப் பந்துகள், முத்திரைத்தாள் விற்பனை என வியாபாரத்தில் ஆர்வத்துடன் இருந்தவர். இதில், ஈட்டிய பணத்தை பங்குகளில் முதலீடு செய்யும் பழக்கம் கொண்ட பஃப்பட், பின்னாளில் உலகின் மிகப்பெரிய பங்கு நிறுவனத்தின் தலைவராக உருவானவர்.