990 ஹெக்டேர் விவசாய நிலத்தில் கோல்ஃப் கிளப்.. ட்ரம்ப் குடும்பத்தினரால் விவசாயிகள் பாதிப்பு!
கோல்ஃப் கிளப்பை உருவாக்கும் ட்ரம்ப் குடும்பத்தினர்
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், வியட்நாமில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள கோல்ஃப் கிளப் மைதானத்திற்காக 990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான கின்பாக் சிட்டி மற்றும் அதன் கூட்டாளிகள், பிராண்ட் உரிமத்திற்காக ட்ரம்ப் அமைப்புக்கு 5 மில்லியன் டாலர் செலுத்திய பிறகு, இந்த ஆடம்பர கோல்ஃப் கிளப்பை உருவாக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ட்ரம்பின் ஒப்பந்தம் முடிந்ததும் கிளப் வேலைகள் தொடங்கப்படும். ஆனால் முதலீட்டிலும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும் ஈடுபடாது. ட்ரம்பின் இந்த ஒப்பந்தம் வியட்நாம் மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
990 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு
அதேநேரத்தில் இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சொற்ப பணம் மற்றும் சில மாதங்களுக்கான அரிசி மட்டுமே ரேஷனாக வழங்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வியட்நாமில் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளுக்கு உரிமை இல்லை. ஹங் யென் மாகாணத்தில் உள்ள விவசாயி ஒருவருக்கு, 200 சதுர மீட்டர் நிலத்திற்கு டாலர் 3,200 மற்றும் சில மாதங்களுக்கு அரிசி மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இது வியட்நாமில் ஒரு வருட சராசரி சம்பளத்தை விடக் குறைவு. 990 ஹெக்டேர் நிலம் வாழைப்பழங்கள், லாங்கன்கள் மற்றும் பல பயிர்களால் நிறைந்துள்ளது. இங்குள்ள அனைத்து விவசாயிகளும் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆடம்பர விளையாட்டுக்காக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டங்கள் எழுந்துள்ளன.
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமா?
எனினும், இதுகுறித்து வியட்நாமின் விவசாய அமைச்சகம், ஹங் யென் அதிகாரிகள், ட்ரம்ப் அமைப்பு மற்றும் கின்பாக் நகரம் ஆகியவை இழப்பீட்டு விகிதங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், நிலத்தின் அளவு மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் அதிகாரிகள் இறுதி இழப்பீட்டு விகிதங்களை தீர்மானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலத்தை வைத்துள்ள ஐந்து விவசாயிகள், ஒரு சதுர மீட்டர் விவசாய நிலத்திற்கு $12 முதல் $30 வரை மதிப்பிலான இழப்பீடுகளைப் பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பன்மடங்கு விலையேறும் விவசாய நிலங்கள்
கம்யூனிஸ்ட் அரசான வியட்நாமில், விவசாய நிலம் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நீண்டகால பயன்பாட்டிற்காக சிறிய நிலங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் அதிகாரிகள் நிலத்தை திரும்பப் பெற முடிவு செய்யும்போது அவர்களுக்கு எந்தப் பங்கும் கொடுக்கப்படுவது இல்லை. இதற்காக, போராட்டங்கள் பொதுவானவை என்றாலும் ஆனால் பலனளிக்காது. இழப்பீடு அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் டெவலப்பர்கள்தான் அதற்கான செலவைச் செலுத்துகிறார்கள்.
மறுபுறம், கோல்ஃப் கிளப்பின் இந்தத் திட்டத்தால், அங்கிருக்கும் பல விவசாய நிலங்கள் பன்மடங்கு விலையேறி வருகின்றன. மேலும், மாகாணத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கோல்ஃப் கிளப் சிறந்த வேலைகளை உருவாக்கி கிராம மக்களை வளப்படுத்தும் என்று கூறுகின்றனர். மேலும் அங்கிருக்கும் விவசாயிகள் வயது மூப்பின் காரணமாக உழைக்க முடியவில்லை என்று கூற்றும் உள்ளது.