”ட்ரம்பை விமர்சிப்பதை ஜெலன்ஸ்கி நிறுத்த வேண்டும்” - உக்ரைனுக்கு புதிய செக் வைக்கும் அமெரிக்கா!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாட்டு அதிகாரிகள் இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. இதனிடையே, ”தங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது” உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”தேர்தல்கள் இல்லாத ஒரு சர்வாதிகாரிதான் ஜெலன்ஸ்கி. அவர் வேகமாக நகர்ந்துவிடுவது நல்லது. இல்லையெனில், அவருக்கென ஒரு நாடுகூட இருக்கப் போவதில்லை. அவசியமில்லாத ஒரு போருக்காக, உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை 350 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளது. அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கப்பட்ட நிதியைப் பொறுத்தவரை, ஐரோப்பா வழங்கியதைவிட 200 பில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவிட்டுள்ளது” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு ஜெலன்ஸ்கி, “ரஷ்யா உருவாக்கிய தவறான தகவல் உலகத்தில் ட்ரம்ப் வாழ்கிறார். புதினை தனிமையில் இருந்து விடுவிக்க உதவுகிறார். இது உக்ரைனுக்கு சாதகமானதல்ல” எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தப் பதிலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. “எங்கள் நாட்டின் மீது முன்வைக்கும் விமா்சனங்களை உக்ரைன் மட்டுப்படுத்த வேண்டும்” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா், “அமெரிக்காவை உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி விமா்சிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அத்தகைய விமா்சனங்களை அவா் மட்டுப்படுத்தவேண்டும். மேலும், உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரிய வகைக் கனிமங்களைத் தோண்டியெடுப்பதற்கான உரிமையை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஜெலன்ஸ்கி கையொப்பமிட வேண்டும்.
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு அந்த ஒப்பந்தம் ஆகும். அதைவிட உக்ரைனுக்கு சிறந்த பாதுகாப்பு உத்தரவாதம் இருக்க முடியாது” என எச்சரித்துள்ளார்.