இந்திய விளைபொருள் சந்தையைக் குறிவைக்கும் அமெரிக்கா.. இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பா?
மூடி வைத்துள்ள விவசாய சந்தையை இந்தியா திறந்துவிட வேண்டுமென்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லுட்னிக் வலியுறுத்தியுள்ளார். வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவது குறித்து அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை நடத்திய மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயலிடமும் இது குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. இப்பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரியை அதிகரிப்பது குறைப்பது தவிர, தங்கள் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரிப்பதில் உள்ள தடைக்கற்களை அகற்ற வேண்டும் எனவும் அமெரிக்கா கூறுவதாகத் தெரிகிறது.
பரந்து விரிந்த தேசமான அமெரிக்கா வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மிகப்பெரிய அளவில் நுகர்வோரை கொண்ட இந்திய சந்தை அமெரிக்காவுக்கு எப்போதுமே ஒரு குறியாக இருந்து வருகிறது.
விலை குறைவான அமெரிக்க விளைபொருட்களுக்கு இந்திய சந்தை திறந்துவிடப்படுவது இங்குள்ள நுகர்வோருக்கு சாதகமாக அமைந்தாலும் நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படும் விவசாயத்திற்கு பேரிடியாக அமையும் என GTRI எனப்படும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உலகளவிலான 90% உணவுப்பொருட்கள் வர்த்தகத்தை 5 பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே கட்டுப்படுத்துவதாகவும் இந்தியா தனது கதவை திறந்துவிட்டால் இந்நிறுவனங்களை சார்ந்து இந்திய விவசாயிகள் பிழைப்பு நடத்த வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விளைபொருட்களுக்கு இந்தியாவில் 350% வரை இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் தற்போது வரை அமெரிக்க பொருட்களை இங்கு விற்க முடியாத நிலை உள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்கி விவசாய சந்தையை திறந்துவிடும் பட்சத்தில் அது இந்திய விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஒன்றிய அரசின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.