ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்.. இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. ஒரேநாளில் தலைகீழ் மாற்றம்!
‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், அதற்காக பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். அந்த வகையில், H1B விசா கட்டணத்தையும் அதிகளவில் உயர்த்தினார். இப்போது, அதிலும் தோல்வி கண்டுள்ளார். ஆம், அவருடைய கட்டண உயர்வுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் வெளியிட்ட அறிவிப்பில், ”H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்” என்கிற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது, இந்தியர்களுக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஹெச்-1பி விசா காரணமாக வேலை இழக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது. அதேநேரத்தில், இந்தக் கட்டண உயர்வுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, அமெரிக்க வர்த்தக சபை, ஃபெடரல் நீதிமன்றம் வழக்குத் தொடுத்தது.
இந்தக் கட்டணம் குடியேற்றச் சட்டங்களை மீறுவதாகவும், அமெரிக்க வணிகங்களுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் வர்த்தக சபை மனுவில் குறிப்பிட்டது. விசா செயலாக்கச் செலவை மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கச் சட்டம் அனுமதிக்கும் நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது நிர்வாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய H1-B விசாக்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணத்திற்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவழக்கு தொடர்பாக போஸ்டனில் உள்ள மாவட்ட நீதிபதி லியோ சொரோகின், ”இந்த அதீத கட்டண உயர்வை சட்டவிரோதமான வரி” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும், அதிபர் தனது அதிகார வரம்பை மீறி இந்தக் கட்டணத்தை விதித்துள்ளார் என்றும் அவர் தீர்ப்பளித்தார். தற்போது இந்தக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், புதிய H-1B விண்ணப்பங்களை பழைய கட்டணத்திலேயே தாக்கல் செய்யலாம். அதேநேரத்தில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. H-1B விசா திட்டத்தில் இந்தியர்கள் அதிகளவில் பயனடைவதால், இந்தத் தீர்ப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதத்தைத் தந்துள்ளது.

