அமெரிக்கா | ஒரேநாளில் கோல்டன் கார்டு திட்டத்தில் ஆயிரம் பேருக்கு விசா!
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, குடியேற்றத்தை தடுக்க, முறைப்படுத்த ஏகப்பட்ட விதிகளை மாற்றினார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுன்றி, சட்டப்பூர்வ குடியேற்றம் தொடர்பாகவும் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். விசா கட்டுப்பாடுகளிலும் புதிய நடைமுறைகளைப் புகுத்தியுள்ளார். ஏற்கெனவே ஹெச் 1 பி விசா நடைமுறையில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடுத்ததாக, புதிய கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தார். இது அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 43 கோடி ரூபாய்) முதலீடு செய்பவர்கள் அந்நாட்டில் குடியுரிமை பெற வழி வகுக்கும். இந்தப் புதிய விசா தற்போதைய EB-5 விசாவை மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கோல்டன் கார்டு விசா திட்டத்துக்கு அமோக வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை அதிகாரியான ஹோவர்ட் லுட்னிக், ”கோல்டுகார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு விசா விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோல்டன் கார்டு வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்டன் கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார். 5 மில்லியன் டாலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு. அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது. அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை ரத்து செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.