சூடான் | பாலியல் வன்புணர்வில் பச்சிளம் குழந்தைகள்.. ராணுவப் படைகள் அட்டகாசம்! ஐ.நா. அதிர்ச்சி தகவல்
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில், ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் சூடான் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே போர் உருவானது. நாடு முழுவதும் இரு படைகளும் சண்டை போட்டுக் கொண்டதில் 20,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக 1.4 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் வீடுகளில் இருந்து நாட்டின் பல்வேறு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். யுனிசெஃப்பின் அறிக்கைபடி, போர் தொடங்கியதில் இருந்து உள்நாட்டுக்குள் சுமார் 61,800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர்.
போரின்போது இரு படையினரும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது, கட்டாய குழந்தை திருமணம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூடானில் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயுதப் படையினரால் 221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வடஆப்பிரிக்க நாடுகளில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்படுவோர்கள் குறித்த தகவல் சேகரிக்கும் நிறுவனம் அளித்த அறிக்கை அடிப்படையில் 221 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த எண்ணிக்கை அதிகளவில் இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகளின் 30 சதவிகிதம் பேர் ஆண் குழந்தைகளாகும். 5 வயதுக்குப்பட்ட 16 குழந்தைகளும், 4 பச்சிளம் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். கெடாரெஃப், கஸ்ஸாலா, கெசீரா, கார்ட்டூம், நதி நைல், தெற்கு கோர்டோஃபான், வடக்கு டார்பர் மற்றும் மேற்கு டார்பர் ஆகிய மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், பலர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும், ஆயுதக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு பயந்து புகார் தெரிவிக்க தயங்குவதாகவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக யுனிசெஃப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல், “சூடானில் மில்லியன் கணக்கான குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர். இது போர் தந்திரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சர்வதேச சட்டத்தின் அருவருப்பான மீறலாகும். மேலும் இது ஒரு போர்க்குற்றமாக மாறக்கூடும். இது நிறுத்தப்பட வேண்டும்" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.