“கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயார்; ஆனால் ட்ரம்ப் இதை செய்யணும்” - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
டொனால்ட் ட்ரம்பின் ஆதரவு உக்ரைனுக்கு முக்கியம் என, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் சென்றடைந்த ஜெலன்ஸ்கி, தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களுக்கு ட்ரம்பின் ஆதரவு முக்கியம் எனவும், மற்ற யாரையும் விட தாங்களே அமைதியை அதிகம் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் உக்ரைனும், அமெரிக்காவும் மூலோபாய கூட்டாளிகளாக இருப்பதாக குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, இருவரும் இலக்குகளை உண்மையாக புரிந்துகொள்ள நேர்மையாக இருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தை கையெழுத்திட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ள ஜெலன்ஸ்கி, அமெரிக்கா உக்ரைனுக்காக பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை, அவரது இல்லத்தில் ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது, இந்திய மதிப்பில் உக்ரைனுக்கான 24 ஆயிரம் கோடிநிதியுதவியை வேகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த சந்திப்பின்போது, இங்கிலாந்தின் முழு ஆதரவும் உக்ரைனுக்கு இருப்பதாக, கெய்ர் ஸ்டார்மர் உறுதியளித்தார். முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு, காரசாரமாக விவாதமாக முடிந்தது ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.