ஜப்பானில் நாளை சுனாமி? கலக்கத்தில் மக்கள்!
செய்தியாளர்: சேஷகிரி
ஜப்பான் நாடே பரபரப்பாக இருக்கிறது. ஜூலை 5ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம், சுனாமி வரும் என்ற ஒரு கணிப்புதான் இதற்கு காரணம். இக்கணிப்பை வெளியிட்டவர் ஏதோ வானியல் நிபுணர் அல்லர். காமிக் புத்தகம் எழுதுபவர். ரியோ டட்சுகி 1999ஆம் ஆண்டு THE FUTURE I SAW என்ற பெயரில் எழுதிய புத்தகத்தில் பல கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் ஜூலை 5இல் சுனாமி என்ற கணிப்பு. ஏற்கனவே வந்த சுனாமி, நிகழ்ந்த அணு உலை விபத்துகளை இவர் முன்கூட்டியே கணித்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூலை மாதம் 5ஆம் தேதி ஜப்பானில் கடலுக்கு அடியில் நிலம் பிளந்து மிகப்பெரிய சுனாமி உருவாகி பேரழிவை ஏற்படுத்தும் என இவர் கணித்துள்ளார்.
இதனால் கடலோரப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர். ஜப்பானுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்கள் திட்டத்தை ரத்து செய்துள்ளனர். ஜப்பானுக்கு செல்லும் விமானங்கள் காலியாக செல்கின்றன. ஆனால் அறிவியல் ரீதியாக அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. பல்கேரியாவை சேர்ந்த பாபா வாங்கா என்ற மூதாட்டியின் கணிப்புகள் பெரும்பாலும் பலித்து அவர் உலகளவில் பிரபலமாகியுள்ளார், ரியோ டட்சுகியின் கணிப்புகளும் இந்த பாணியில் உள்ளதால் இவர் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படத் தொடங்கிவிட்டார்.