அடியோடு சரிந்த ட்ரம்ப்.. ஆப்பு வைத்த பொதுமக்கள்.. கடும் கோபத்தில் அமெரிக்கர்கள்!
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றவுடன் 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய சுங்க வரிகளை விதித்தார்.
இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவுகள் மோசமடைந்தது. இறக்குமதி பொருள்கள் குறைந்ததால் அமெரிக்காவில் பொருள்களின் விலை உச்சத்தைத் தொட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, வணிகர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் ட்ரம்ப்பின் செல்வாக்கு அமெரிக்காவில் சரிந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மக்கள் ஆதரவு முன்னெப்போதும் இல்லாத வகையில் 33% ஆகக் குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ட்ரம்பின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் போர் தொடர்பான முடிவுகள் பயனற்றவை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நீண்டநாள் நட்பு நாடுகளான நேட்டோ நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப், வெளிப்படையாக கருத்து தெரிவித்தார். மேலும் கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பேன் என்று அவர் சொன்னதும், டென்மார்க்குக்கு சொந்தமான கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவுடன் இணைப்பேன் என்று சொன்னதும் அமெரிக்க மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேபோல ஈரான் மீது அவர் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருவதும் ட்ரம்ப் மீதான நம்பிக்கையை குறைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க மாகாண தேர்தல்களிலும் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பல்வேறு இடங்களில் தோல்வியைத் தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

