ட்ரம்ப் ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தார்? நட்பு நாட்டுக்கே 'செக்' வைத்த அதிர்ச்சி.. தலைகீழாகும் கணக்கு!
செய்தியாளர் : ஐடா அருச்செல்வி
அமெரிக்கா - தென் கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சிகளை குறைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் ‘உல்சி ஃப்ரீடம் ஷீல்டு’ (Ulchi Freedom Shield) பயிற்சிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான தனது நல்லுறவு மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளில் தென் கொரியா போதிய உதவி செய்யாதது ஆகியவற்றை இதற்கான காரணங்களாக அவர் குறிப்பிட்டார்.
'கிம் ஜாங் உன்னுடனான எனது நல்லுறவை கருத்தில் கொண்டு, தென் கொரியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் அமெரிக்கா தொடர்ந்து பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்தப் பயிற்சிகள் அதிக செலவுடையவை மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு நட்பாகவும் மரியாதையாகவும் இருக்கும் ஒரு நாட்டுக்கு தவறான, விரோதமான சமிக்ஞையை அனுப்புகின்றன' என ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் தென் கொரியாவும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய கூட்டாளிகளாக உள்ளன. வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை திறன்களுக்கு எதிராக இரு நாடுகளும் தொடர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு நடைபெறவிருந்த பயிற்சியில் சுமார் 18,000 தென் கொரிய வீரர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ட்ரம்பின் அறிவிப்புக்கு மத்தியிலும் பயிற்சிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை தொடங்கியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், பயிற்சிகள் எந்த அளவுக்கு குறைக்கப்படும் என்பது தெளிவாகவில்லை. இதனிடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையில் இணைவது குறித்து தென் கொரியாவிடம் கேட்டபோது, அந்நாடு மறுத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென் கொரியா கூறியுள்ளது. வட கொரியா நீண்டகாலமாக அமெரிக்கா-தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சிகளை கடுமையாக எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

