ஈரான் - உக்ரைன் போர் | ட்ரம்ப் - புதின் தொலைபேசி உரையாடல்.. விவரங்கள் வெளியீடு!
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்டை நாடான ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதலைத் தொடங்கிய நிலையில், 4 ஆண்டுகளைக் கடந்தும் அந்தப் போர் நீடித்து வருகிறது. இந்த போரின் காரணமாக இரு நாடுளிலும் ஏரளமான உயிரிழப்புகளும், உட்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் தான் தற்போது இந்தப் போர் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, அதிகப்படியான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை பரஸ்பரம் ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தசூழலில் தான், நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார். இருவர்களுக்கிடையேயான உரையாடல் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், இருவர்களுக்கிடையேயான உரையாடலில் பேசியவை குறித்து ரஷ்ய அதிபரின் வெளியுறவு விவகாரங்களுக்கான உதவியாளர் யூரி உஷாகோவ் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ”ட்ரம்ப் மற்றும் புதின் இடையேயான ஆலோசனையின் போது, உக்ரைன் போர் சூழல், ஈரான் விவகாரம், இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால தூதரக உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். உக்ரைன் மோதலுக்கு விரைவாக தீர்வு காண்பது இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், துருக்கியின் அங்காரா நகரில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்தத் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது. இந்தத் தொலைபேசி பரிமாற்றம் வெறும் வழக்கமான சம்பிரதாய உரையாடலாக இல்லாமல், மிக முக்கிய விவகாரங்களை அலசும் விதமாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்ததாக யூரி உஷாகோவ் விவரித்துள்ளார்.
தொடர்ந்து, உக்ரைன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு காண அமெரிக்கா தயாராக இருப்பதை டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தங்களுக்கு சாதகமான நேரத்தில் மாஸ்கோவிற்குச் சென்று இந்த மத்தியஸ்த முயற்சிகளைத் தொடரத் தயாராக உள்ளனர் என்றும் உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

