ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. 2 வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு.. அதிகரிக்கும் பதற்றம்!
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தப் போரின் காரணமாக, உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிரந்த போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 10 நிபந்தனைகளை ஈரான் முன்வைத்திருந்தது.
இந்த சூழலில் தான், இஸ்ரேல் - லெபனான் நாடுகளுக்கிடையே 10 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலாகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தெரிவித்திருந்தர். இதையடுத்து, ஹார்முஸ் முழுமையாக திறக்கப்படுகிறது எனவும் ராணுவக் கப்பல்களைத் தவிர மற்ற கப்பல்கள் ஹார்முஸைக் கடக்கலாம் எனவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிவித்தார். இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையத் தொடங்கிய நிலையில், எரிவாயுக் கப்பல் போக்குவரத்தும் எளிதாகத் தொடங்கியது
இந்த சூழலில் தான், ஏற்கனவே ஹார்முஸ் நீரிணைப் பகுதியைச் சுற்றியுள்ள சர்வதேசக் கடல்பகுதியில் அமெரிக்கா முற்றுகையிட்டிருக்கும் நிலையில், ஹார்முஸ் திறக்கப்பட்டதையடுத்து முற்றுகையை கைவிட வேண்டும் என அமெரிக்காவை ஈரான் எச்சரித்தது. எனினும், ஈரானுடனான ஒப்பந்தம் கையெழுத்திடும் வரை முற்றுகை தொடரும் என ட்ரம்ப் அறிவித்ததையடுத்து எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி ஈரான் உத்தரவிட்டிருக்கிறது. இது, உலகநாடுகளிடையே எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
இந்த சூழலில், இன்று ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த 2 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது, அப்பகுதியில் போர் சூழல் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில், கப்பலும் அதன் மாலுமிகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் தெரிவித்திருக்கிறது.

