\
Nepal second flood wave
Nepal second flood wave Reuters

நேபாள பேரழிவு கொடுத்த Warning.. இமயமலை சுற்றியுள்ள பிரமாண்ட திட்டங்களால் அச்சம்! பயத்தில் மக்கள்!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு, இமயமலை பகுதி மாநிலங்களில் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்ட திட்டங்கள் குறித்து, அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

திபெத்தில் பனிப்பாறை உடைந்து போதேகோஷி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து நேபாளத்தில் 9 மீட்டர் உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்து 600க்கும் மேற்பட்ட உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில், இமயமலைப் பகுதியில் செனாப்-பியாஸ் நதி இணைப்பு, லடாக்கிலிருந்து ஹரியாணா வரை சூரிய மின்சக்தி பாதை, பானுபள்ளி-பிலாஸ்பூர்-மணாலி-லே ரயில் திட்டம் போன்றவை பனியாறுகள் உருகலை வேகப்படுத்தி திடீர் வெள்ளம், நிலச்சரிவு அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக வெப்பமயம் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன. அதன் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சீனாவுக்கு சொந்தமான திபெத் பகுதியில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று தனது கடின தன்மையை இழந்து உடைந்தது. இதனால் அதிலிருந்த பெரிய அளவிலான நீர் அங்கிருந்த போதேகோஷி (Bhote Koshi) ஆற்றின் வழியாக நேபாளத்துக்குள் பாய்ந்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் நேபாளத்தை இதுவரை காணாத பேரிடருக்கு ஆளாக்கி சென்றது.

சேறும் சகதியுமாக 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நேபாளம் சின்னாபின்னமானது. 700க்கு மேல் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் சூழலில், தொடர்ந்து மீட்புபணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தசூழலில் தான் இமயமலைப் பகுதி சுற்றியுள்ள மாநிலங்களில் திட்டமிடப்பட்டுள்ள பிரமாண்ட திட்டங்கள் இதுபோல மற்றொரு பேரிடருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nepal second flood wave
நேபாள வெள்ளத்தில் பணப்பெட்டி.. உள்ளே இருந்த 92 லட்சம் பணம்.. மற்றுமொரு திருட்டுச் சம்பவம்!

அச்சமூட்டும் திட்டங்கள்..

குலு-மணாலி மற்றும் மண்டி உள்ளிட்ட பகுதி மக்கள், 2 ஆயிரத்து 356 கோடி ரூபாய் மதிப்பிலான செனாப்-பியாஸ் நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து கவலையடைந்துள்ளனர். இத்திட்டத்தில், பிர் பஞ்சால் மலைத்தொடருக்குக் கீழே சுரங்கப்பாதை வழியாக, சந்திரா நதியிலிருந்து பியாஸ் நதிக்குத் தண்ணீர் திருப்பப்படவுள்ளது. இந்த திட்டம் வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், அச்சம் எழத் தொடங்கியுள்ளது.

அதேபோல, லடாக்கிலிருந்து ஹரியாணாவின் கைத்தால் பகுதிக்கு, சூரிய மின்சக்தி பரிமாற்ற பாதை அமைக்கும் திட்டமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திட்டத்துக்காக பிரம்மாண்டமான கோபுரங்களை அமைப்பது, கட்டுமானப் பணிகளின் போது கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவது பெருவெள்ள பாதிப்பை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

Reuters

இந்த பட்டியலில், பானுபள்ளி - பிலாஸ்பூர் - மணாலி - லே அகல ரயில் பாதை திட்டமும் அடங்கும். திட்டத்தின் மொத்த வழித்தடத்தில் சுமார் 55 விழுக்காடு, சுரங்கப்பாதைகளால் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரம்மாண்ட திட்டங்கள் இமயமலைப் பகுதியை முற்றிலுமாக அழித்துவிடும் என்கிறார் இமயமலை நிதி அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான குமன் சிங். இந்தத் திட்டங்கள் காரணமாக புவி வெப்பமயமாதலால், பனியாறுகள் வேகமாக உருகும் எனவும், திடீர் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்படும் என்பதும் குமன்சிங்கின் எச்சரிக்கையாக இருக்கிறது..

Nepal second flood wave
மர்மத்தை மூடி மறைக்கும் சீனா? திபெத்தில் இயற்கையின் கோரம்! காட்டிக் கொடுத்த பரபரப்பு சிசிடிவி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com