மூளைக்கு வயதாகாது.. 90 வயதிலும் 40 வயது நினைவாற்றல்.. புதிய ஆய்வில் வெளிவந்த ரகசியம்!
செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்
அறிவியல் உலகை ஆச்சரியப்படுத்தும் வகையில், ‘SuperAgers’ எனப்படும் 80-90 வயது முதியவர்கள், இளமையான 40 வயதுகாரர்களைவிட மேம்பட்ட நினைவாற்றலைக் கொண்டிருக்கின்றனர் என்று புதிய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களின் மூளையில், வயதானபோது சுருங்கும் சாம்பல் பகுதி (Gray Matter) மற்றும் முன்புற நினைவுப் பகுதி (Anterior Cingulate Cortex) தடிமனாகவே காணப்படுகிறது. இது, வயது முதிர்வுடன் வரும் நினைவிழப்பை தடுக்கிறது. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள Northwestern University Feinberg School of Medicine என்ற மருத்துவக் கல்வி நிறுவனம், இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இது அமெரிக்காவின் மிக முன்னணி மூளை மற்றும் நினைவுத்திறன் ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
குறிப்பாக Alzheimer’s மற்றும் SuperAger ஆய்வுகளில் உலக அளவில் புகழ்பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் SuperAgers-ஐ ஆய்வு செய்து, மூளையின் வலிமை, நினைவுத்திறன் மற்றும் நரம்பியல் வேறுபாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர். SuperAgers-இன் மூளையில் அரிதாகக் காணப்படும் von Economo நரம்புகள் அதிக அளவில் உள்ளன. இது விரைவான தகவல் பரிமாற்றத்தையும், கவனச் செறிவையும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மரபியல் அம்சங்களுக்கு அப்பாற்பட்டும், சமூக உறவுகள், வாழ்க்கை முறை, மன அழுத்தக் குறைவு மற்றும் உடல் இயக்கம் ஆகியவை இவர்களின் மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய காரணிகளாகின்றன. மேலும், இவர்களுக்கு மனநோய் மற்றும் மனச்சோர்வு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அறிவியல் நிபுணர்கள், SuperAgers குறித்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள், எதிர்காலத்தில் நினைவிழப்பு மற்றும் அல்ஸைமர் நோய்க்கு புதிய சிகிச்சை வழிகளைத் தரக்கூடும் என்று நம்புகின்றனர்.