மெக்சிகோவைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கடத்தல் பேர்வழி எல் சாபோவை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோவில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அந்நாட்டையே வெகுவாக உலுக்கி வருகிறது. முக்கிய குற்றவாளியான கடத்தல் பேர்வழி எல் சாபோவை பல்வேறு முயற்சிகளுக்குப் பின் மெக்சிகோ அரசு கைது செய்தது.
இதனைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு, எல் சாபோ வழக்கு விசாரணைக்காக அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் மீது 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளை முடித்து, ப்ரூக்ளின் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனைத்து வழக்குகளிலும் எல் சாபோவை குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.
இந்தச் சூழலில் எல் சாபோவுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது சுமார் 200 டன் கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை எல்சாபோ அமெரிக்காவுக்கு கடத்தி வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.