ஈரான் ஏற்படுத்திய அதிர்வு... ட்ரோன் தயாரிப்பவர்களை தேடி அலையும் அமெரிக்கா!
செய்தியாளர் : M. மீரா
பல தசாப்தங்களாக, இராணுவ வலிமை என்பது விமானம் தாங்கி கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டே அளவிடப்பட்டு வந்தது. ஆனால், உக்ரைன் மற்றும் ஈரான் போர்க்களங்களை பார்த்த பிறகு, பென்டகன் அதிகாரிகள் தங்களது ஆயுத தயாரிப்புகள் குறித்த திட்டமிடலை மாற்றி அமைத்து வருகின்றனர். ஒரு காரை விடக் குறைந்த விலையுள்ள ஆளில்லா விமானங்களே (drones) எதிர்கால போர்க்களங்களில் இருக்கும் என்று கணிக்கிறார்கள்.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் வெளியான அறிக்கையின் படி, பென்டகன் குறைந்த விலையில் 3 லட்சம் போர் டிரோன்களை உருவாக்கும் முயற்சியில், ஒப்பந்ததாரர்கள், தொழில் நிறுவனங்கள், ட்ரோன் பந்தய வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை தேடுகிறது.
உக்ரைன் மற்றும் வளைகுடாவில் நடந்த மோதல்கள், போர்க்களத்தில் சிறிய, மலிவான ட்ரோன்களின் ஆதிக்கத்தை பார்த்த நிலையில் பென்டகன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் பென்டகன் தனது ட்ரோன் திறன்களை துரிதமாக விரிவுபடுத்த மிகவும் நம்பிக்கைக்குரிய உற்பத்தியாளர்களைக் கண்டறிய Drone Dominance என்று தலைப்பிட்டு 18 மாதப் போட்டியைத் தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டி, 3,00,000 ட்ரோன்கள் வரை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை நிறுவனங்களுக்கு 1.1 பில்லியன் டாலர் முதலீட்டில் வழங்குகிறது. ட்ரம்ப் நிர்வாகம் ட்ரோன் போர் திட்டங்களை வியத்தகு முறையில் விரிவுபடுத்துவதற்காக அடுத்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டில் 54.6 பில்லியன் டாலர் கோரியுள்ளது.
இந்த டிரோன் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் முன்னணி நிறுவனங்களான ட்ரோன் பந்தய உலக சாம்பியனான சோரன் மன்ரோ-ஆண்டர்சனால் (Soren Monroe-Anderson) நிறுவப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான நெரோஸ் (Neros) மற்றும் ஒரு உக்ரேனிய ட்ரோன் உற்பத்தியாளருடன் கூட்டு சேர்ந்த பிரிட்டிஷ் நிறுவனமான ஸ்கைகட்டர் (Skycutter)ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜார்ஜியாவின் நடைபெற்ற முதல் சுற்றில், 26 நிறுவனங்கள் போட்டியிட்டன. அச்சுற்றில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட Skycutter நிறுவனம் 2,500- ட்ரோன்களை உள்ளடக்கிய பென்டகனின் மிகப்பெரிய ஆர்டரை தட்டிச் சென்றது. மீதமுள்ள ஒப்பந்தத்தை பெற பல அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
எதிர்காலத்தில் போர்கள், மலிவு விலை ட்ரோன்களின் பெருங்கூட்டத்தையே பெருமளவில் சார்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று பென்டகன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

