அஸ்திவாரத்தை ஆட்டிய ஹவுதிகள்.. நடுங்கிய சவுதி அரேபியா.. Escape ஆன அமெரிக்கா!
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி ஆதரவு படைகளைத் தள்ளிச் சென்று, மொக்கா துறைமுகம் மற்றும் பாப் எல்-மண்டெப் நீரிணையில் முக்கியமான பெரிம் தீவை கைப்பற்றியுள்ளனர். இதனால் செங்கடல் வழியாகச் செல்லும் உலக வர்த்தக கப்பல்கள் மீது அவர்களுக்கு கண்காணிப்பு, அழுத்தம் கொடுக்கும் திறன் அதிகரித்துள்ளது. சவுதி எல்லைக்குள் ஏவுகணை தாக்குதல்களும் அதிகரித்து, பாதுகாப்பு அச்சம் உயரும் நிலையில் உள்ளது.
செய்தியாளர் - M. மீரா
சவுதி அரேபியாவின் எல்லைக்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏமனில் சவுதி ஆதரவு படைகள் முக்கியமான பகுதிகளை இழந்து வருவது புதிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவ உதவியை வழங்குமாறு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விடுத்த கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்ததாக வெளியாகியுள்ள தகவல், நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இதனால், ஏமனில் நடைபெறும் மோதல் தற்போது சவுதி அரேபியாவின் பாதுகாப்பு, செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் உலகளாவிய எண்ணெய் சந்தை ஆகியவற்றுடன் நேரடியாக இணைந்துள்ளது.
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் ஏமனில் சவுதி ஆதரவு படைகளுக்கு எதிரான தாக்குதலுக்குப் பின்னர் சேதமடைந்த ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இருப்பது காட்டப்படுகிறது.
வீடியோவில் அடையாளம் தெரியாத ஒருவர், தாக்குதலில் 10 ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறுகிறார்.
இது முதல் வாகனம், இவை இரண்டாவது மற்றும் மூன்றாவது, இது நான்காவது… என மொத்தம் 10 வாகனங்கள்” என்று அவர் கூறுகிறார். அந்த தாக்குதல் கடுமையாக நடைபெற்றதாகவும், ஹவுதி போராளிகள் சவுதி ஆதரவு படைகளைத் தோற்கடித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆனால், இந்த வீடியோவில் காட்டப்படும் இடங்கள் மற்றும் தாக்குதலின் முழுமையான பின்னணி சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
ஏமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுடன் தொடர்புடைய நான்கு ஆதாரங்களை மேற்கோள் காட்டி Reuters வெளியிட்ட தகவலின்படி, ஹவுதிகள் பெரிம் தீவு (perim island) அல்லது மயூன் தீவை கைப்பற்றியுள்ளனர்.
இந்த தீவு சாதாரணமான ஒரு நிலப்பரப்பு அல்ல. இது பாப் எல்-மண்டெப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் இந்த குறுகிய கடல்வழி உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானது.
இதற்கு முன்னதாகவே ஏமனின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகமான மொக்காவையும் ஹவுதிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மொக்கா மற்றும் பெரிம் ஆகிய இரு பகுதிகளும் ஹவுதிகளின் வசம் இருப்பது, பாப் எல்-மண்டெப் வழியாகச் செல்லும் கப்பல்களை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அந்த வழித்தடத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் அவர்களுக்கு முக்கியமான நிலையை உருவாக்குகிறது.
Reuters முன்னதாக வெளியிட்ட தகவலின்படி, செங்கடல் கடற்கரைப் பகுதியில் ஹவுதிகள் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு ஈரானின் IRGC வழிகாட்டுதலை வழங்கியதாக சில ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹவுதிகளின் தாக்குதல் ஏமன் எல்லைக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. சவுதி அரேபியாவில் ஹவுதிகள் ஏவியதாக கூறப்படும் ஒரு ஏவுகணை சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள ஜசான் பகுதியில் விழுந்துள்ளது.
அமெரிக்காவிடம் உதவி கேட்ட முகமது பின் சல்மான்?
நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொடர்புகொண்டு ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவ உதவி கோரியதாக மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி Reuters செய்தி வெளியிட்டுள்ளது. .
ஆனால், அமெரிக்கா தற்போது ஹவுதிகளுக்கு எதிராக நேரடியாக மற்றொரு ராணுவ தளவாடங்களை இறக்க விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வாஷிங்டன் நேரடி ராணுவப் படைகளை அனுப்புவதற்கு பதிலாக சவுதிக்கு உளவுத்துறை மற்றும் தகவல் ஆதரவை வழங்க முன்வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பொருள், பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவை வைத்திருக்கும் சவுதி அரேபியா, ஹவுதி அச்சுறுத்தலை தனது சொந்த ராணுவ திறனைப் பயன்படுத்தியே சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், ஹவுதிகள் சவுதி அரேபியாவை ஆக்கிரமிக்கத் தயாராகிறார்களா?” என்ற கேள்விக்கு உறுதியான பதில் இல்லை
Reuters வெளியிட்ட செய்தியின் படி சவுதி அரேபியாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்தைவிட, ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விரிவுபடுத்தி, சவுதி ராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது அழுத்தம் கொடுத்து வருவதையே காட்டுகின்றன.
சவுதி அரேபியாவிடம் மிகப்பெரிய விமானப்படை இருக்கிறது. ஆனால் தரையில் ஹவுதிகளின் முன்னேற்றம், கடலில் உருவாகும் அச்சுறுத்தல் மற்றும் எல்லைக்குள் நடைபெறும் தாக்குதல்கள் — இவை அனைத்தும் சவுதிக்கு ஒரே நேரத்தில் பல முனைகளில் சவாலை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தால், அடுத்த குறி சவுதியின் ராணுவத் தளங்களா, எண்ணெய் கட்டமைப்புகளா அல்லது முக்கிய கடல்வழிகளா என்பதே இப்போது உலக நாடுகளின் கவனமாக உள்ளது.

