அமெரிக்காவிடம் வர்த்தக ஒப்பந்தம் | ’இந்தியாவுக்கு சுதந்திரம் உள்ளது’ - ரஷ்யா
’இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது. எண்ணெய் சப்ளையர்களைத் திருப்திப்படுத்த முயற்சி புதியதோ அல்லது மாஸ்கோவை நோக்கியோ அல்ல என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்தே இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18% குறைக்கப்பட்டது. இந்த நிலையில், ’இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் வாங்க சுதந்திரம் உள்ளது. எண்ணெய் சப்ளையர்களைத் திருப்திப்படுத்த முயற்சி புதியதோ அல்லது மாஸ்கோவை நோக்கியோ அல்ல என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை ரஷ்யா மட்டுமே வழங்குவதில்லை என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இந்தியா எப்போதும் மற்ற நாடுகளிடமிருந்து இந்த பொருட்களை வாங்கியிருக்கிறது. எனவே, இங்கு புதிதாக எதையும் நாங்கள் காணவில்லை" எனத் தெரிவித்துள்ளார். எனினும், ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் ரஷ்யாவுக்குக் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில், ரஷ்ய கச்சா எண்ணெயை முழுமையாக மாற்றுவது இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நடைமுறைக்கு மாறானது என்று ரஷ்யாவில் உள்ள எரிசக்தி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியா தனது கச்சா எண்ணெயில், கிட்டத்தட்ட 88% இறக்குமதி செய்கிறது. 2022க்குப் பிறகு ரஷ்ய எண்ணெய், இந்தியாவுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. 2021 வரை இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் வெறும் 0.2 சதவீதமாக இருந்த நிலையில், 2022 பிப்ரவரிக்குப் பிறகு அந்நாட்டின் கச்சா எண்ணெய்யை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்தது. உக்ரைன் மீதான போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை நிராகரித்த பிறகு, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் கொள்முதல் தேவை அதிகரித்தது. நிகழ்நேர பகுப்பாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஜனவரி முதல் மூன்று வாரங்களில் ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்களாகக் குறைந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் சராசரியாக 1.21 மில்லியன் பீப்பாய்களாகவும், 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 2 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமாகவும் இருந்தது.
இதற்கிடையே, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக தேவைப்பட்டால் ட்ரம்பின் பதவிக்காலம் வரை காத்திருக்கத் தயாராக இருப்பதாக மோடி அரசாங்கம் 2025 செப்டம்பர் தொடக்கத்தில் அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது. இந்தக் கடுமையான நிலைப்பாட்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது. “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட உதவியாளர்களால் இந்தியா மிரட்டப்படாது, கடந்த காலங்களில் மற்ற விரோதமான அமெரிக்க நிர்வாகங்களை எதிர்கொண்டதால், அவரது பதவிக்காலம் வரை காத்திருக்கத் தயாராக இருக்கும்" என்று டோவல், ரூபியோவிடம் கூறியதாக ப்ளூம்பெர்க் மேற்கோள் காட்டியுள்ளது.

