காங்கோ கோல்டன் சுரங்க விபத்து.. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள ருபாயா கோல்டன் சுரங்கம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோல்டன் சுரங்கமே உலகில் தேவைப்படும் மொத்த கோல்டன் தாதுக்களில் 15 சதவீதத்தை வழங்குவதாக இருக்கிறது. கோல்டனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் டான்டலம் என்ற உலோகம் அதிக வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. இது மொபைல் போன்கள், கணினிகள், விண்வெளி உதிரிபாகங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் தயாரிப்பில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.உலகின் முன்னணி மின்னணு சாதன நிறுவனங்கள் பலவும் இந்தச் சுரங்கத்தையே நம்பியுள்ளன.
இந்த நிலையில் தான், கடந்த புதன்கிழமை (ஜனவரி 28) கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பலர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களை மீட்கும் பணி 3-வது நாட்களாக தொடர்ந்து இன்றும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து, இந்த துயர சம்பவத்தை கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்தும் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.
மேலும், இந்த சம்பவத்திற்கு, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையே காரணம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து மற்றும் உயிரிழப்புகளால், கோல்டன் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சர்வதேச சந்தையில் அதன் விலை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கோவில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் முறையற்ற சுரங்கத் தொழிலால் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

