பாகிஸ்தான் | 17 வயது இன்ஸ்டா பிரபலம்.. உறவினரால் வீட்டில் சுட்டுக் கொலை! கௌரவக் கொலையா?
பாகிஸ்தான் உப்பர் சித்ராலைச் சேர்ந்தவர் சனா யூசப். இவர், தனது டிக்டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றார். சனா யூசப், ஒரு சமூக ஆர்வலரின் மகள் ஆவார். அவர் கலாசார பெருமை, பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வி விழிப்புணர்வை ஊக்குவிப்பு உள்ளிட்ட கருத்துகள் தொடர்பாக டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இன்ஸ்டா பிரபலமான இவர், அவருடைய வலைத்தளப் பக்கத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது உறவினர் ஒருவராலேயே சனா யூசப் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் செக்டார் ஜி-1இல் உள்ள அவரது வீட்டிலேயே நடைபெற்றதாகவும், அந்த நபர் சனாவைச் சுடுவதற்கு முன்பு அவரிடம் பேசியதாகவும், அதற்குப் பின்பே அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சனா மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (PIMS) அனுப்பப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது கௌரவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
எனவே அந்தக் கோணத்திலும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டில் பிரபலமான இளம்பெண்களைக் குறிவைத்து நடைபெறும் வன்முறை சம்பவங்களின் அடிப்படையிலும் இந்த வழக்கு சேர்க்கப்பட்டு அதன்படியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்ட ஹிரா என்ற 15 வயது சிறுமி குவெட்டாவில் தனது தந்தை மற்றும் தாய் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.