தொடரும் போர் | “இம்ரான் கானை விடுவியுங்கள்” - பாகி. அரசுக்கு எதிராக வைரலாகும் பதிவுகள்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி நேற்று முன்தினம் இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது.
இதனால் இரு நாடுகளிடையே போர் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பதிலடி ராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் ராணுவம் திணறிவரும் நிலையில், மற்றுமொரு அடியாக, பலூச் விடுதலை இராணுவமும் அந்நாட்டைத் தாக்கி வருகிறது. பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மற்றும் கெச் பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி தாக்குதல்களுக்கு பலூச் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. இதில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அந்நாட்டு அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். மேலும் இம்ரான் கானை விடுதலை செய்யவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஆகஸ்ட் 5, 2023 அன்று இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அரசின் ரகசியங்களை கசியவிட்டதற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அரசின் ரகசியங்களை கசியவிட்டது முதல் அரசு பரிசுகளை விற்றது வரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர்மீது பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், அதில் சில வழக்குகளுக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க அவரது ஆதரவாளர்கள் கடந்த சில மாதங்களாகக் கோரி வருவதுடன், போராட்டமும் நடத்திவருகின்றனர். இதற்கிடையே இந்தியா - பாகிஸ்தான் போரையொட்டி, அவரை விடுவிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். “பதற்றமான இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு உதவக்கூடிய ஒரே அரசியல்வாதி வேறு யாருமல்ல, ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான்தான்” என சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
பயனர் ஒருவர், “பாகிஸ்தானின் உண்மையான சக்தியையும் குரலையும் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள். பாகிஸ்தானுக்கு இம்ரான் கான் தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "காலத்தின் தேவை... ஒரு மனிதன்; ஒரு தேசம்; ஒரு குரல். பாகிஸ்தானுக்கு இம்ரான்கான் தேவை" எனவும், மூன்றாவது பயனர், “உங்கள் ஈகோவை விட்டுவிடுங்கள். அவரிடம் பேசுங்கள். அவரை விடுதலை செய்யுங்கள். இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்று உங்களுக்கு ஆலோசனை சொல்ல அவரை வெளியே அழைத்து வாருங்கள். ஏனென்றால், கடினமான தேர்வுகளை எடுக்க உங்களுக்குத் தைரியம் இல்லை என்பது தெளிவாகிறது” எனப் பதிவிட்டு வருகின்றனர்.