அதிகாலை 6 மணிக்கு வந்த இமெயில்.. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. 30,000 பேர் Layoff.. ஆரக்கிள் அதிரடி!
இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 30,000 பணியாளர்களில் கிட்டத்தட்ட 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. உலகளவில், பணிநீக்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவிலும் இத்துறைகளில் லட்சக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பார்க்கின்றனர். இந்தச் சூழலில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, AI டேட்டா சென்டர்களை அமைப்பதற்கான மிகப்பெரிய முதலீடுகள் காரணமாக தொழில்நுட்ப துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், மிகவும் பிரபலமான ஆரக்கிள் நிறுவனமும் உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் டேட்டா சென்டர் கட்டுமானத் திட்டங்களுக்காக அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதால், நிறுவனத்தின் செலவினங்களை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆட்குறைப்பு, இந்தியா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இணையத்தில் பரவி வரும் தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 30,000 பணியாளர்களில் கிட்டத்தட்ட 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. உலகளவில், பணிநீக்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது ஆரக்கிள் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் ஏறத்தாழ 18% ஆகும். இருப்பினும், நிறுவனம் இதன் அளவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பிளைண்ட், ரெட்டிட் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடகத் தளங்களில் நிலவும் பேச்சுகள், பரவலான வேலை இழப்புகளைச் சுட்டிக்காட்டுகின்றன.
இதுகுறித்து ஆரக்கிள் நிறுவனம், அதிகாலை 5-6 மணிக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பலரும் ரெட்டிட் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களில் பலரும், இதுகுறித்து மனிதவளத் துறை அலுவலரோ அல்லது மேலாளரோ தங்களிடம் எந்தவித கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பணிநீக்கம் குறித்து ஆரக்கிள், “AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், சில வேலைகள் எதிர்காலத்தில் தேவையற்றதாக மாறக்கூடும் என்பதால் அந்த துறைகளில் பணியாளர் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களின் காரணமாக, செயல்பாடுகளைச் சீரமைக்க ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது. மேலும், பணியாற்றிய பணியாளர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 15 நாட்கள் சம்பளம், ஒரு மாத அறிவிப்பு ஊதியம், விடுப்பு ஊதியம், தகுதியின் அடிப்படையில் பணிக்கொடை மற்றும் இரண்டு மாத சம்பள உயர்வு ஆகியவற்றை வழங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொகுப்பு தாமாக முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஆரக்கிள் நிறுவனத்தின் இந்தப் பணிநீக்க அறிவிப்பு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

