யுத்தத்தின் சுவடுகள் | கேபிள்களால் கூடு கட்டும் உக்ரைன் பறவைகள் – அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு!
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், தற்போது ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தப்போரில், பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தசூழலில் தான், இந்தப் போர் மனித உயிழப்புகள் இடப்பெயர்கள் போன்ற மனிதர்களுக்கிடையே ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே, இயற்கை மற்றும் வனவிலங்குகளின் வாழ்வியலையும் எந்த அளவிற்கு மோசமாக மாற்றியமைத்துள்ளது என்பதற்கு ஒரு புதிய சான்றுகள் கிடைத்துள்ளன.
உக்ரைன் எல்லைப் பகுதியில் போர்க்களத்தில் வீசப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்திப் பறவைகள் கூடு கட்டத் தொடங்கியுள்ளன. முன்னணி உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரால் போர்க்களத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய பறவைக் கூடுகள், தற்போது கீவில் உள்ள உக்ரைன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளன.
1,200 கி.மீ நீளமுள்ள உக்ரைன் போர்க்கள எல்லைகளில், இரு நாட்டு ராணுவமும் வான்வழித் தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை இயக்குவதற்காக இந்த அதிமெல்லிய ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்தி வருகின்றன.
சிக்னல் ஜாமர்கள் மூலம் ட்ரோன்களை முடக்காமல் இருக்க, இந்த 20 கி.மீ நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்குதலுக்குப் பிறகு மரங்கள், வயல்வெளிகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகளில் சிலந்தி வலை போலக் காட்சியளிக்கும் இந்த கேபிள்களைப் பறவைகள் தங்களின் கூடுகளைக் கட்டுவதற்குப் புற்களுடன் சேர்த்துப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. கண்டெடுக்கப்பட்ட இரு கூடுகளில் ஒன்று உக்ரைன் அருங்காட்சியகத்திலும், மற்றொன்று நெதர்லாந்து நாட்டின் ஆய்வகத்திற்கும் அனுப்பப்படவுள்ளது.
ட்ரோன் போர்க்களமாக மாறியுள்ள உக்ரைனில், இயற்கையும் தனக்கான தற்காப்புப் பாதையை இப்படி மாற்றியமைத்துக் கொண்டு வருவது உலக அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
