உருக்குலைந்த நேபாளம்.. மண்ணில் புதைந்த சடலங்கள்.. தோண்டி எடுத்து நகையை திருடும் கும்பல்!
இமயமலை திபெத் பகுதியில் பனிப்பாறை ஏரி உடைந்து, நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது. 350-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் நடக்கும் வேளையில், மண்ணில் புதைந்த சடலங்களில் இருந்த நகைகளை திருடிய கும்பல் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து, மனிதநேயம் சிதைந்ததைக் காட்டுகிறது.
அழகு நிறைந்திருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் நிறைந்திருக்கும் என்று சொல்வார்கள். அப்படித்தான் தற்போது இமயமலைப் பகுதியில் இயற்கை கோரத் தாண்டவம் ஆடியுள்ளது. நேற்று முன்தினம் காலை சீன–நேபாள எல்லையையொட்டிய திபெத் பகுதியில், இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரியில் உடைப்பு ஏற்பட்டதாகவும், அதனால் நேபாளத்தின் போதே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல மீட்டர் உயரத்திற்கு சேரும் சகதியுடன் பீய்ச்சி அடித்து பாய்ந்து வந்த பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் நேபாளம், இந்தியா மற்றும் சீனாவின் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 350-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 1,500-க்கும் மேற்பட்டோர் நிலை என்ன ஆனதென்றே தெரியவில்லை. நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலரின் நிலை என்ன என்பது குறித்தும் இதுவரை தகவல் தெரியவில்லை. இந்நிலையில், நேபாள–சீன எல்லையில் ஆற்றில் இரண்டாவது பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், நொடிக்கு நொடி மண்ணில் இருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்தப் பெருவெள்ளம் நேபாளம் மட்டுமின்றி, இந்தியா, சீனா என உலக நாடுகள் பலவற்றையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணில் இருந்து இழுத்து, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கும்பல் ஒன்று திருடுவது போன்ற மனதை உலுக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக நேபாள காவல்துறையினர் உயிரிழந்த உடல்களில் இருந்து நகைகளைத் திருடியதற்காக இருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இயற்கையின் கோரத் தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரையும், உடைமைகளையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்தே நகைகளைத் திருடும் சம்பவம் மனிதநேயம் எந்த அளவுக்கு மரித்துப் போய் இருப்பதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
