நேபாள் அழிவை விட 100 மடங்கு அபாயம்.. சீனாவின் பேராசைக்கு பலியாகுமா இந்தியா? அதிர்ச்சி தகவல்!
நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து போதே கோஷி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து நூற்றுக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில், இமயமலையில் இன்னும் பெரிய அபாயம் பதுங்கி இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். திபெத்தில் நிலநடுக்க அபாயம் மிகுந்த மெடோக் பகுதியில் சீனா திட்டமிட்டுள்ள யாருங் சாங்போ அணை உடைந்தால், அருணாச்சலப் பிரதேசம், அசாம், வங்கதேசம் முழுவதும் பேரழிவு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேபாளத்தில் நேற்று முன்தினம் பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் - திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.
சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். இந்த பேரழிவில் இதுவரை 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த பேரழிவை தொடர்ந்து இமயமலையில் இதுபோல பேரழிவை ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை ஆய்வாளர்கள் தொடர்ந்து பட்டியலிட்டு வருகின்றனர். அதில் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பல மடங்கு பாதிப்பு ஏற்படும் இடமாக பிரம்மபுத்திரா நதியில் சீனா அமைக்க திட்டமிட்டுள்ள மாபெரும் அணை திகழ்ந்து வருகிறது.
திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா 'யாருங் சாங்போ' (Yarlung Zangbo) என்ற மாபெரும் அணைக்கட்டு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த அணை உலகின் மிகப்பெரிய அணையாகக் கருதப்படும் சீனாவின் 'திரீ கோர்ஜஸ்' (Three Gorges Dam) அணையை விட 3 மடங்கு பெரிய மின் உற்பத்தித் திறன் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.
ஆனால், சீனா இந்த அணையை கட்ட திட்டமிட்டுள்ள 'மெடோக்' (Medog) பகுதி, இமயமலையில் அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பிளவு மண்டலத்தில் (Seismic Zone V) அமைந்துள்ளது. இதனால் சீனா இங்கு ஒரு அணையை கட்டி அதில் மிகப்பெரிய அளவிலான நீரை தேக்கி வைத்திருக்கும் சூழலில், அந்த பகுதியில் சிறு நிலநடுக்கம் ஏற்பட்டாலே அணை உடையும் அபாயம் என்பது பல மடங்கு அதிகம் என ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்படி ஒரு வேளை அணை உடைந்தால், பல நூறு கோடி கனமீட்டர் நீர் ஒரே நேரத்தில் கீழ்ப் பகுதிக்கு பாய்ந்து இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி அழியும் சூழல் ஏற்படும். இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது நேபாள நிலநடுக்கப் பாதிப்பை விட பல நூறு மடங்கு அதிக உயிர்ப்பாதிப்பையும் பொருள் சேதத்தையும் உருவாக்கும் என்பதால் சீனாவின் இந்த அணை முயற்சியை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

