மும்பை தாக்குதல் குற்றவாளி| அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல், நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் அமெரிக்கர்கள் 6 பேர் உள்பட 166 பேர் பலியானார்கள். எனினும் இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில், அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்ட நிலையில், பின்னர் அவனுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தச் சம்பவத்தில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா, தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்ட அவர், அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்பை, இந்திய பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் போய்ச் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து மோடியுடனான சந்திப்பின்போது ட்ரம்ப், “2008 மும்பை தாக்குதலுக்கு சதி செய்த தஹாவூர் ராணாவை நாடு கடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தியாவில் ராணா நீதியின் முன் நிறுத்தப்படுவார்” என்றார். அவருடைய இந்த உத்தரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே, ’தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்’ எனக் கோரி அமெரிக்கா உச்ச நீதிமன்றத்தில் கடைசியாக ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதுவும், நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்படுவது உறுதியாகி உள்ளது. இதற்கான வேலைகள் வேகம் பிடித்துள்ளன. இதற்காக இந்திய அரசின் பல்வேறு அமைப்புகளின் அதிகாரிகளை கொண்ட குழுவினர் அமெரிக்காவுக்கு சென்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் குழு ஆவணங்களை முடித்து, அமெரிக்க அதிகாரிகளுடன் சம்பிரதாயங்கள் மற்றும் சட்டப்பூர்வங்களை நிறைவேற்றியது என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து ராணா சிறப்பு விமானம் மூலம் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட இருக்கிறார். அவர், டெல்லி திகார் சிறையிலோ அல்லது மும்பை சிறையிலோ அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு சிறைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியா வந்தவுடன் ராணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.