உதவிகளை அனுமதிக்கும் அதே சூழலில் காசாவை குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்

ஒருபுறம் நிவாரண உதவிகளை அனுமதித்த அதேசமயத்தில், பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ள இடம் உட்படகாசா முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
இஸ்ரேல் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ்pt web
Published on

காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகின்றன. காசா எல்லை வழியே இஸ்ரேலிய டாங்கிகளும், படைகளும் ஊடுருவத் தொடங்கிவிட்டன.

காசா மட்டுமின்றி மேற்குக்கரை, சிரியா, லெபனான் என இஸ்ரேலின் இலக்குகள் விரிவடைந்துவருவதால், போர் இன்னும் தீவிரமாகும் என்று அஞ்சப்படுகிறது. காசாவில் மட்டும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவிற்குள் தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் காசாவுக்குள் வந்த டாங்கி மற்றும் இரண்டு புல்டோசர்களை அழித்ததாக ஹமாஸ் கூறியுள்ளது.

ஹமாஸ் இஸ்ரேல் போர்
ஹமாஸ் இஸ்ரேல் போர்PT

சண்டை தீவிரமடைந்து வரும் நேரத்தில் காசாவில் அப்பாவி பாலஸ்தீனர்களின் நிலை கவலைக்குரியாதாக இருக்கிறது. முதல்கட்ட நிவாரண உதவியாக 20 டிரெக்குகள் கடந்த சனிக்கிழமை காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தினசரி 100 டிரெக்குகள் நுழைய அனுமதிக்குமாறு ஐநா கோரியுள்ளது. அடுத்தடுத்து 3 கட்டங்களில் நிவாரண டிரெக்குகள் ரஃபா வழியாக காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால், எரிபொருள் இன்றியும், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் இல்லாமலும், மின்சாரம் இல்லாமலும் ஏழு மருத்துவமனைகள் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. எரிபொருள் இல்லாததால் தண்ணீர், சுகாதார கட்டமைப்புகள் இல்லாமல் ஏராளமானோர் தவித்துவருகிறார்கள். ஐநா நடத்தும் பள்ளிகள், முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு கிடைக்காமலும், அழுக்கான தண்ணீரை குடிக்க வேண்டிய கட்டாயத்திலும் தள்ளப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர்முகநூல்

வடக்கு காசாவில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் வான்வழியே துண்டுபிரசுரங்களை அனுப்பி எச்சரித்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்து ஏழு லட்சம் பேர் வெளியேறிவிட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற வழியின்றி அங்கிருப்பதால் அங்கு நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

காசாவில் இரவு முழுவதும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கான்யூனிஸ் மற்றும் Nuseirat அகதிகள் முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் கூறியுள்ளது. காசாவில் உள்ள அல்குவாட்ஸ் (al-Quds) மருத்துவமனையில் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தஞ்சமடைந்துள்ள நிலையில், அதன் அருகே குண்டுகளை வீசியுள்ள இஸ்ரேல், கடந்த 24 மணிநேரத்தில் 320 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல்
இஸ்ரேல்pt web

மேற்குக்கரையில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 90 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடந்துவரும் தாக்குதல்களில் இதுவரை 4 ஆயிரத்து 651 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 14 ஆயிரத்து 300 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com