ஈரானின் உளவுத்துறை அமைச்சர் மரணம்.. மொத்தமாக அழிக்கும் இஸ்ரேல்! இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள்!
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் கட்டிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அலி லாரிஜானி மரணத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. இந்நிலையில், போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய தலைகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்குவது பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.
செய்தியாளர் - விக்னேஷ்
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல்களை தொடங்கின. இதில், அந்த நாட்டின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி உட்பட பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. 19-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய தலைவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைமை வரிசையில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கருதப்பட்ட அலி லாரிஜானி மற்றும் துணை ராணுவப் படையின் தலைவர் குலாம்ரேசா சுலைமானியும் (Gholamreza Soleimani) கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது.
டெஹ்ரானில் உள்ள ஈரானின் பாதுகாப்புத் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நள்ளிரவுத் தாக்குதலில் இந்த இருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை மேற்கொண்ட ஈரான், 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்கி அலி லாரிஜானி மரணத்திற்கு பழிவாங்கியது. தெஹ்ரானில் அலி லாரிஜானி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் Esmail Khatib-ஐ கொன்று விட்டதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. ஏற்கனவே அலி லாரிஜானி மரணம் ஈரானுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இஸ்ரேல் உளவுத்துறை அமைச்சர் Esmail Khatib-ஐ கொன்று விட்டதாக கூறியுள்ளது ஈரானுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. உளவுத்துறை அமைச்சர் மரணம் குறித்து ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானின் முக்கிய தலைகளை இஸ்ரேல் எடுத்துள்ளது இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது. ஏற்கனவே, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் வராததால் பல்வேறு யூகங்கள் பரவி வருகிறது. சூழல் இப்படி இருக்க, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மொஜ்தபா கமேனிக்கு குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஈரானும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறி வைத்து தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போர் இரண்டு வாரம் மட்டுமே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 3-ஆவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. மேலும், இரு தரப்பிலும் நடத்தப்படும் தாக்குதலை பார்க்கையில் இந்த போர் மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்பிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

