தொடரும் போர்... இறுதிக்கட்டத்தை எட்டும் பேச்சுவார்த்தை... குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் - ஹமாஸ்!
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.
இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தப் போரில் 45 ஆயிரத்திற்கும் (45,338) மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களைவிட்டு வெளியேறி உள்ளனர். இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையிலும் ஒப்பந்தம் எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.
இதற்கு இஸ்ரேல் தரப்பை குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ் அமைப்பினர், கடைசி நேரத்தில் புதிய நிபந்தனைகளை இஸ்ரேல் விதிப்பதாக கூறியுள்ளனர். ஹமாஸ் அமைப்பினரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் அரசு, இறுதிசெய்யப்பட்ட விவகாரங்களில் புதுபிரச்னையை எழுப்புவதாக தெரிவித்துள்ளது. காஸா பகுதியில் இருந்து படையினரை வெளியேற்றுவது, பிணைக் கைதிகளை விடுவிப்பது, புலம்பெயர்ந்தவர்களை சொந்த ஊர் திரும்ப அனுமதிப்பது ஆகியவற்றில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.