அமெரிக்க எரிவாயு நிலையங்களை ஹேக் செய்த ஈரான்?
அமெரிக்கா முழுவதும் உள்ள எரிவாயு நிலையங்களின் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை கண்காணிக்கும் ATG அமைப்புகள், கடவுச்சொல் பாதுகாப்பு இன்றி இணையத்தில் திறந்த நிலையில் இருந்ததால், ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்களால் ஊடுருவப்பட்டதாக தகவல்.
அமெரிக்கா முழுவதும் உள்ள எரிவாயு நிலையங்களின் எரிபொருள் சேமிப்பு தொட்டிகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை (Automatic Tank Gauge - ATG) ஈரான் நாட்டுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் ஊடுருவியதாக கூறப்படுகிறது. இணைய பாதுகாப்பு குறைபாடுள்ள இந்த அமைப்புகள் கடவுச்சொல் (password) இல்லாமல் இணையத்தில் வெளிப்படையாக இருந்ததால் ஹேக்கர்களால் எளிதாக அணுக முடிந்தது என்று கூறப்படுகிறது.
எரிபொருள் நிலையங்களின் எரிபொருள் கண்காணிப்பு அமைப்புகளில் நடந்த இணையவழி ஊடுருவல்களில் ஈரானுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் முக்கிய சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹேக்கர்களால் எரிபொருள் தொட்டிகளின் டிஜிட்டல் திரையில் இருந்த அளவீடுகளை மாற்ற முடிந்தது என்றும் தொட்டிகளில் உள்ள உண்மையான எரிபொருளின் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது வரை எந்தவித சேதமோ, எரிபொருள் தட்டுப்பாடோ, ஆபத்தோ ஏற்படவில்லை என்றாலும் இந்த அமைப்புகளுக்குள் நுழைந்த ஹேக்கர்களால், உண்மையான எரிபொருள் கசிவு ஏற்பட்டால் அதை கண்டுபிடிக்க முடியாமல் மறைத்துவிட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க உளவுத்துறை மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஈரான் இருக்கலாம் என முதன்மையாக சந்தேகிக்கின்றன. போதிய டிஜிட்டல் சான்றுகள் (Forensic evidence) இல்லாததால் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், கடந்த காலங்களில் எண்ணெய், எரிவாயு மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்புகளை ஈரான் ஹேக்கர்கள் தொடர்ந்து இலக்கு வைத்துள்ளதே இந்த சந்தேகத்திற்கு முக்கிய காரணம் ஆகும் என்று கூறப்படுகிறது.

