நிலத்தடியில் ஈரானின் ஏவுகணை நகரம்.. வீடியோ காட்சிகளால் அமெரிக்கா அதிர்ச்சி.!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நீடிக்கும் நிலையில், ஈரான் தங்களின் நிலத்தடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.
ஈரானுடனான போர் விரைவில் முடிவடைந்துவிடும் என அமெரிக்கா தொடர்ந்து கூறிவரும் நிலையில், தங்களிடம் நிலத்தில் உள்ள ஏவுகணை கட்டமைப்புகளை காட்டி ஈரான் அதிரடி காட்டியுள்ளது. ஈரான் அமெரிக்கா இடையே 10 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரானின் விமானப்படையும், கடற்படையும் 90 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்தார். ஆனால், இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து, தாங்கள் இன்னும் வலிமையோடு இருப்பதாக கூறியிருந்தது.
இந்த நிலையில், தங்களின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஈரானின் புதிய நிலத்தடி ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்ட ஒருங்கிணைந்த தளம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 1,450 கி.மீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஈரானின் அதிநவீன 'கய்பர்-ஷெகன்' ரக ஏவுகணைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது விடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் இஸ்ரேலை எட்டும் திறன் கொண்டது என்பதால் இது இஸ்ரேலுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
அதே போல முதல்முறையாக ஏவுகணைகளுடன் சேர்த்து தற்கொலை படை ட்ரோன்களான 'ஷாஹெத்' (Shahed) ரக ட்ரோன்களை நிலத்தடியில் இருந்தே ஏவும் புதிய தொழில்நுட்பமும் தங்களிடம் இருப்பதை இந்த வீடியோ மூலம் ஈரான் உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் சுரங்கப்பாதைகளுக்குள் ஏவுகணைகளை வேகமாக நகர்த்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ரயில் தண்டவாள அமைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை அடுத்தடுத்து ஈரானால் ஏவ முடியும் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த போர் விரைவில் முடிவடையும் என அமெரிக்கா தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஈரான் நிலத்துக்கடியில் அமைந்துள்ள ஆயுத தளங்களை வெளிக்காட்டி தங்களால் பல மாதங்களுக்கு போரிட முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளது. ஈரானின் புரட்சிகர ராணுவம் வெளியிட்டுள்ள இந்த காணொளி அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

