ஈரான் பதற்றம் | $100 மில்லியன் விமானத்தை தானே நாசம் செய்த அமெரிக்கா.. ஏன் தெரியுமா?
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் 5-ஆவது வாரமாக தொடரும் நிலையில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி, F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானம் ஈரானிய வான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த இரண்டு விமானிகள் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேறியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு விமானி மீட்கப்பட்டதாகவும், மற்றொருவரை மீட்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது.
இந்த அதிக ஆபத்து நிறைந்த மீட்பு முயற்சிகளின் போது, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இரண்டாவது அமெரிக்க விமானப்படை வீரரான ஒரு கர்னலை மீட்பதற்காக, அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள ஒரு தற்காலிக பாலைவன விமான தளத்தில் சிறப்பு நடவடிக்கைகளுக்காக போக்குவரத்து விமானங்களை நிலைநிறுத்தியது. ஆனால், தரையிறங்கிய பிறகு இந்த விமானங்களில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ அல்லது மென்மையான பாலைவன நிலப்பரப்பில் சிக்கிக்கொண்டதாலோ பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றதால், நிலைமை சிக்கலானது.
ஈரானியப் படைகள் நெருங்கி வந்ததால், மீட்புப் பணியை நிறைவு செய்ய அமெரிக்க இராணுவம் கூடுதல் விமானங்களை வரவழைக்க வேண்டியிருந்தது. இந்த விபத்தின் காரணமாகப் பின்னால் விட்டுச்செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான இரண்டு போக்குவரத்து விமானங்களை அமெரிக்கப் படைகள் வெடிவைத்துத் தகர்த்ததாக, ஒரு பிராந்திய உளவுத்துறை அதிகாரி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஏன் தனது சொந்த விமானங்களை அழித்தது?
எதிரிப் பிரதேசத்தில் அதிக ஆபத்து நிறைந்த பணிகளின் போது பின்பற்றப்படும் ஒரு வழக்கமான நெறிமுறையின்படி, முக்கியமான உபகரணங்கள் ஈரானியர்களின் கைகளில் கிடைக்கும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக விமானங்கள் அழிக்கப்பட்டன. ஒசாமா பின்லேடனைக் கொல்லும் பணியின் போது, அபோட்டாபாத்தில் அமெரிக்க இராணுவம் இதேபோன்ற ஒரு நெறிமுறையைப் பின்பற்றியது.
இந்த விமானங்கள் மேம்பட்ட தகவல் தொடர்பு, சிறப்பு நடவடிக்கைகளுக்கான இரகசிய தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. மேலும், உபகரணங்களை இழப்பதால் ஏற்படும் நிதிச் செலவை விட, அவற்றைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எந்த விமானங்கள் தகர்க்கப்பட்டன?
நேற்று, ஈரானிய அரசு ஊடகங்கள், இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள ஒரு தட்டையான பாலைவனப் பகுதியில் சிதறிக் கிடக்கும், நிலையான இறக்கைகள் கொண்ட போக்குவரத்து விமானம் எனத் தோன்றும் ஒன்றின் கருகிய பாகங்களின் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்தன. அந்த விமானங்கள் லாக்ஹீட் மார்ட்டின் C-130 வகையைச் சேர்ந்தவை எனத் தெரிகிறது. பெரும்பாலும் MC-130J கமாண்டோ II ரகமாக இருக்கலாம். இதன் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இவை சிறப்பு நடவடிக்கைகளுக்காக எதிரிப் பிரதேசங்களுக்குள் துருப்புகளை ஊடுருவச் செய்யவும் வெளியேற்றவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
சிதைவுகளில், போயிங் MH-6 லிட்டில் பேர்ட்ஸ் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு வகை ஹெலிகாப்டரின் பாகங்களும் காணப்பட்டன. ஃப்ளைட் குளோபல் அறிக்கையின்படி, இந்த சிறிய ஹெலிகாப்டர் சிறப்பு நடவடிக்கைப் பணிகளுக்கு ஆதரவளிக்க, MC-130J விமானத்தின் உள்ளிருந்தே இவற்றை அனுப்ப முடியும்.
இந்த நிகழ்வு குறித்து ஈரானிய புரட்சிகர காவலர் படை, "எதிரியின் பறக்கும் பொருள்கள் அழிக்கப்பட்டன. மேலும் அமெரிக்கா மீண்டும் ஒரு அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது" என்று கூறியது.
அதேசமயம், டஜன் கணக்கான ஆயுதமேந்திய விமானங்கள் ஈடுபட்ட ஒரு மீட்பு நடவடிக்கையில் "மலைகளின் ஆழத்திலிருந்து" மற்றுமொரு விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

