காமெனி டிரம்பை சந்திக்க மாட்டார்.. இந்தியப் பெருங்கடல் வரை போர் பரவும் - ஈரான் எச்சரிக்கை!
செய்தியாளர் - M.மீரா
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருந்து வருகின்றன.
பேச்சுவார்த்தையில், அணு ஆயுத திட்டம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால், சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தால் எதிர்காலத்தில் மொஜ்தபா காமெனியை சந்திக்க விரும்புவதாக டிரம்ப் ஜூன் 3 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனியின் மூத்த ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் சிஎன்என் (CNN) தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமானால் அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள 24 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை வாஷிங்டன் விடுவிக்க வேண்டும். இத்தொகையானது அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் சிறியது என்றாலும், ஈரானுக்கு இது மிக முக்கியமானது என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பில்லை என்றும் ட்ரம்ப் ஈரானுடன் போதுமான நம்பிக்கையை வளர்ப்பதில் தவறிவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகளை முட்டுக்கட்டைக்கு இட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருமாறும் வாஷிங்டனை ரெசாய் வலியுறுத்தியதுடன் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் நீண்ட கால மோதலுக்கு ஈரான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
போர் தொடர்ந்தால் மற்றும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீக்கப்படாவிட்டால், நாங்கள் போரை இந்தியப் பெருங்கடல், பாப் அல்-மண்டப், செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரிவுபடுத்துவோம்; மேலும் அங்குள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி போருக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரம்ப் இஸ்ரேலின் தலையீடு இன்றி முடிவுகளை எடுக்க வேண்டும். ஈரானிய மக்களுக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும். முற்றுகையை நிறுத்த வேண்டும் மற்றும் முடக்கப்பட்டுள்ள எங்கள் சொத்துக்களை விடுவிக்க வேண்டும். இது ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எதிர்காலத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

