"இந்தியா, சீனா நரகக் குழி.." ட்ரம்புக்குப் பதிலடி கொடுத்த ஈரான்!
அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் (Michael Savage) எழுதியிருந்த 4 பக்கக் கட்டுரை ஒன்றை டொனால்டு ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' X தளத்தில் மறுபதிவு செய்திருந்தார்.
அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டத்தை விமர்சிக்கும் அந்த கட்டுரையில், இந்தியர்களையும் சீனர்களையும் இழிவுபடுத்தும் விதமாக அந்த நாடுகளை நரகக் குழிகள் (Hellholes) என்று கூறிய வார்த்தைகள இடம்பெற்றிருந்தன.
இந்தியர்களும் , சீனர்களும் அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக கூறி நரகக் குழிகள் என்று கூறப்பட்டிருந்தது. சாவேஜ் எழுதியிருந்த கட்டுரையில் கலிபோர்னியாவின் உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை ஆதாரங்கள் இன்றி, இந்தியர்களும் சீனர்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தக் கருத்துகள் முற்றிலும் அறியாமையின் அடிப்படையிலானவை, மற்றும் தரம் தாழ்ந்தவை என்று கூறி இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் (Randhir Jaiswal) கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதரகம் 'பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் இடையே மிக வலுவான உறவும், ஒருவருக்கொருவர் ஆழ்ந்த மரியாதையும் உள்ளது என ஓர் அறிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில் நரகக் குழிகள் என்ற கூறியது குறித்து பேசியிருக்கும் ஹைதராபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம், தனது X பதிவில், ’சீனாவும் இந்தியாவும் நாகரிகத்தின் தொட்டில்கள். உண்மையில், ஈரானிய நாகரிகத்தையே அழித்தொழிப்பதாக கூறிய போர்க் குற்றவாளி ட்ரம்ப் இருக்கும் இடம்தான் நரகக் குழி’ என்று பதிவிட்டது.
மேலும் மும்பையில் இருக்கும் ஈரான் துணைத் தூதரகம் தனது X பதிவில், இந்தியாவின் கணேசா உத்சவ காட்சிகளைப் பகிர்ந்து, ’ட்ரம்பின் அறியாமையைப் போக்க அவர் ஒருமுறை இந்தியாவுக்குக் கலாசாரப் பயணம் மேற்கொள்ளலாம்’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளது .

