நாடு கடத்தப்படும் இந்திய மாணவி.. ட்ரம்புக்கு எதிராக குவியும் வழக்குகள்!
அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் குடியேற்றக் கொள்கை, விசா கட்டுப்பாடுகள், வரி விதிப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்டவை அடக்கம். மறுபுறம், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து போராட்டங்களில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மிச்சிகன் பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மாணவர், தம்முடைய மாணவர் குடியேற்ற நிலை சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறி ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இவருடன், வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதிபர் ட்ரம்பின் புதிய உத்தரவுகளால், அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாக குடியேறிவர்கள்கூட கடும் பிரச்னைகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர, இந்திய மாணவர்களும் பிரச்னைகளுக்கு ஆளாகி உள்ளனர்.
இந்திய மாணவரான சின்மய் தியோர், வெய்ன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில், ஆகஸ்ட் 2021 முதல் கணினி அறிவியல் படித்து வருகிறார். மே 2022இல், அவர் தனது 21 வயதுக்குப் பிறகு H-4 விசாவிலிருந்து F-1 விசாவுக்கு விண்ணப்பித்தார். அந்த அனுமதியையும் அவர் சட்டப்பூர்வமாகப் பெற்றார். என்றாலும் வரும் மே 2025இல் தனது படிப்பை முடித்து பட்டம் பெற அவர் எதிர்பார்க்கிறார். தற்போது அவர் தனது நெருங்கிய குடும்பத்துடன் கேன்டனில் வசிக்கிறார். மேலும் அமெரிக்க காவல் துறையின்படி, டியோர் மீது எந்தக் குற்றமும் சுமத்தப்படவில்லை அல்லது தண்டனை விதிக்கப்படவில்லை. எந்தவொரு அரசியல் பிரச்சினை தொடர்பாகவும் வளாகத்தில் நடைபெறும் போராட்டங்களிலும் அவர் ஈடுபட்டதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் மாணவர் சேவைகள் மூலம் வந்த மெயிலில், அவரது SEVIS ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் மீதுள்ள குற்றவியல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல், சீனாவைச் சேர்ந்த சியாங்யுன் பு மற்றும் கியுயி யாங், நேபாளத்தைச் சேர்ந்த யோகேஷ் ஜோஷி ஆகியோரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களும் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர். தனது விசா ரத்து குறித்து அமெரிக்க குடிவரவுத் துறை, பல்கலைக்கழகமோ, வெளியுறவுத் துறையோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மாணவர் தரப்பினர் தெரிவித்துள்ளனர். தங்கள் படிப்பை முடிக்கவும், தடுப்புக் காவல் மற்றும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்ளாமல் இருக்கவும் அந்த மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.