ட்ரம்பின் நம்பிக்கையைத் தகர்த்த இந்திய ஊடகம்.. ரத்தான US -இந்தோனேஷியா ரகசிய ஒப்பந்தம்!
அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இந்தோனேசிய வான்வெளியில் முழுமையான அணுகலை வழங்கும் ஒரு ரகசியத் திட்டம், கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே விவாதிக்கப்பட்டது. பின்னர், இந்த ஒப்பந்தம், கடந்த ஏப்ரல் 13 அன்று அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் அவரது இந்தோனேசியப் பாதுகாப்புச் செயலாளர் ஷாஃப்ரி ஷாம்சூதீன் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின்போது கையெழுத்திடப்படவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன் பின்னணியில் இந்திய ஊடகம் இருப்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரால் நிறுவப்பட்ட 'சண்டே கார்டியன்' என்ற ஊடகத்தால் அந்த அறிக்கை குறித்து ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த விவகாரம், பென்டகனில் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்க வேண்டிய சூழலில், இந்திய ஊடகத்தால் அது இந்தோனேசியாவில் புயலைக் கிளப்பியது. இதுகுறித்து, இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் இதுதொடர்பாக, இந்தோனேசிய பிரதிநிதிகள் சபையின் துணைத் தலைவர் சுகம்தா, ‘வெளிநாட்டு இராணுவங்களுக்கு தேசிய வான்வெளியில் வரம்பற்ற அணுகலை வழங்குவதற்கு எந்த சட்ட அடிப்படையுமில்லை. வெளிநாடுகளுடனான எந்தவொரு பாதுகாப்பு ஒத்துழைப்பும் நாடாளுமன்றத்துடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்’என அறிவுறுத்தினார்.
இந்த கடும் எதிர்ப்பு, பிரபோவோ சுபியாண்டோ தலைமையிலான அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. இதையடுத்து, அமெரிக்க விமானங்களுக்கான வான்வழி அனுமதி ஒரு பகுதியாக இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியதுடன், இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும் அது விளக்கமளித்தது.
இதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை முறியடிக்கும் நோக்கத்தில் இந்திய ஊடகத்தில் வெளியான செய்தி வேண்டுமென்றே வெளியிடப்பட்டது என்ற யூகங்களுக்கு இது வழிவகுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் இரகசிய ஆவணம் ஒன்று இந்தியப் பத்திரிகைக்கு எப்படிச் சென்றடைந்தது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மலாக்கா ஜலசந்திக்கு அமெரிக்கா அணுகலை வழங்கும் இந்த ஒப்பந்தம், பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியப் பங்குகளைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் சீனாவை அதிகம் பாதிக்கிறது. அதிலும் சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% மலாக்கா ஜலசந்தியையே சார்ந்து இருப்பதால், அதற்கான பங்குகள் இன்னும் அதிகமாக உள்ளன. இந்தோனேசியாவுடன் சேர்ந்து, இந்த முக்கிய வர்த்தக வழித்தடம் மலேசியா மற்றும் சிங்கப்பூரால் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தோனேசியா இந்த நீரிணையின் பெரும்பகுதியின் குறுக்கே அமைந்துள்ளது. மலாக்காவில் அமெரிக்கா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அதனைப் பதற்றமடையச் செய்யும் என்பதாலேயே இந்த திட்டத்தை வெளியில் கசியவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ட்ரம்பின் நம்பிக்கை தகர்ந்து போயிருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

