போர் குறித்த கருத்து | போப் லியோவைக் கடுமையாகச் சாடிய ட்ரம்ப்.. புயலைக் கிளப்பிய AI படம்!
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் லியோவுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் போர் குறித்த வார்த்தை மோதல் வெடித்துள்ளது.
உலக நாடுகள், உள்ளூர் மக்கள் என யாரையும் விட்டுவைக்காது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார், மீண்டும் அரியணை ஏறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரி, விசா, குடியுரிமை எனக் கடந்து தற்போது இதர நாடுகளின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார். முன்னதாக போதைப் பொருள் விவகாரத்தில் வெனிசுலா அதிபரைச் சிறைபிடித்த நிலையில், தற்போது அணு ஆயுதம் தொடர்பாக ஈரான் பக்கம் திரும்பியுள்ளது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், இன்னும் மத்திய கிழக்கில் பதற்றம் குறையாத நிலையே உள்ளது. இதில், போதாக்குறைக்கு ஹார்முஸ் விவகாரத்தால் எரிபொருள் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் லியோவையும் அவர் விட்டுவைக்கவில்லை. கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, சிகாகோவில் பிறந்த ராபர்ட் பிரீவோஸ்ட், போப் லியோ 14 என்ற பெயரில் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், போருக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, ”ஆயுதங்களைக் கீழே போடுமாறும், போரினால் நாகரிகங்களை அழிக்கும் செயலை நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தினார். பின்னர் தொடர்ந்து, “போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை இறைவன் கேட்பதில்லை. அச்சுறுத்தல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சர்வ வல்லமை படைத்தவர் என்ற அதிகாரம் காட்டுவதை நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள்” எனக் கூறியிருந்தார். போப், ட்ரம்பை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவரது கருத்துகள் அமெரிக்கத் தலைமையை நோக்கமாகக் கொண்டவையாக இருந்தன.
இதையடுத்து களத்தில் இறங்கிய ட்ரம்ப், தற்போது போப்பைக் கடுமையாகச் சாடி வருகிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,‘நான் வெள்ளை மாளிகையில் இல்லையென்றால், லியோ வாடிகனில் இருந்திருக்கமாட்டார். அமெரிக்கா வெனிசுலாவைத் தாக்கியது தவறு என்று நினைக்கும் ஒரு போப் எனக்குத் தேவையில்லை. லியோ குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் பலவீனமானவர் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், போப் தீவிர இடதுசாரிகளுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்துவதில் கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில், பைபிளில் இயேசு கிறிஸ்து லாசரஸை உயிர்ப்பித்த மிராக்கிள் சம்பவத்தை போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை ட்ரம்ப் வெளியிட்டார். அதில் ட்ரம்ப் நீண்ட அங்கி அணிந்துகொண்டு, நோய்வாய்ப்பட்ட ஒரு நபரின் மீது கையை வைத்து குணப்படுத்துவது போன்றும், அவரைச் சுற்றி அமெரிக்க தேசியக் கொடி, போர் விமானங்கள் மற்றும் தேவதைகள் இருப்பது போன்றும் அந்த டிஜிட்டல் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதில் உள்ள உருவம், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனை சார்ந்திருப்பதாகப் பல பயனர்கள் கூறுகின்றனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு போப் ஆண்டவர் உடையில் இருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு புகைப்படத்தை ட்ரம்ப் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள லியோ, ’’டொனால்டு ட்ரம்ப் என்னைத் தாக்கிப் பேசியபோதிலும், அவருடன் விவாதத்தில் ஈடுபட விரும்பவில்ல்லை. கிறிஸ்தவ நற்செய்தி சிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்; போருக்கு எதிராக நான் தொடர்ந்து உரக்கப் பேசுவேன். அமைதியை மேம்படுத்தவும், நாடுக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மற்றும் பன்முக உறவுகளை வலுப்படுத்தவும் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

