’சிக்கிய சிவனாண்டி..’ உலகம் அழியும் என கூறிய 'எபோ நோவா' கைது!
உலகம் அழியும் என கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்ற நபரை கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தன்னைத்தானே தீர்க்கதரிசி என அறிவித்துக்கொண்ட இவர், உலகம் அழியும் என கூறி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தினார். இதனால், அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது" என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்ற நபரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
'எபோ நோவா' என்று அழைக்கப்படும் இவான்ஸ் எஷுன், தன்னைத்தானே தீர்க்கதரிசி என அறிவித்துக்கொண்டார். இவர் சொன்ன சில விசயங்கள் நடந்ததால் மக்களும் அவருடைய பேச்சை பின்தொடர ஆரம்பித்தனர்.
இந்தசூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் தனக்கு ஒரு தெய்வீகத் தரிசனம் கிடைத்ததாகவும், அதில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும் மழை பெய்யும் என்றும், டிசம்பர் 25 முதல் உலகம் அழியத் தொடங்கும் என்றும் எச்சரித்தார். இந்த அழிவிலிருந்து தப்பிக்கத் தான் ஒரு பெரிய மரக் கப்பலை கட்டி வருவதாகவும், அதில் தஞ்சம் புகுபவர்கள் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்றும் அவர் கூறி வந்தார். இது கானா நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் மக்களிடையே ஒருவித பயத்தையும் ஏற்படுத்தியது. மேலும் கப்பலை கட்டுவதற்கு பல்வேறு மக்கள் பணம் திரட்டி அனுப்பியதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் எபோ நோவா குறிப்பிட்ட டிசம்பர் 25ஆம் தேதி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், "பேழைக்குள் தஞ்சம் அடைய ஏராளமானோர் வந்ததால், படகில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் இறைவனிடம் வேண்டிக்கொண்டேன். அதன் விளைவாக, இன்னும் பல படகுகளைக் கட்ட இறைவன் எனக்குக் கால அவகாசம் கொடுத்துள்ளார்" என்று நூதனமாக மழுப்பினார்.
புத்தாண்டு காலங்களில் பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் தீர்க்கதரிசனம் கூறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கானா காவல்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இப்படியான சூழலில் இணையதளங்களைக் கண்காணிக்கும் காவல்துறையின் சிறப்புப் பிரிவு , எபோவின் இந்தச் செயல் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கருதி இன்று அதிகாலையில் அவரைக் கைது செய்தது. தற்போது அவர் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

