பாப் அல்-மண்டேப் டூ செங்கடல்.. ஹவுதியின் கையில் மத்திய கிழக்கு.. ஏமனிலிருந்து வெளியேறும் மக்கள்!
ஏமனில் நிலவும் உள்நாட்டுப் போர் மற்றும் தற்போதைய மோதல்கள் காரணமாக, 1,00,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் சொந்த வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். தாய் மண்ணைவிட்டு வெளியேறிய பெரும்பாலான மக்கள், ஏமனின் பிற பாதுகாப்பான பகுதிகள், பாலைவன எல்லைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நடைபெறும் போரைவிட, தற்போது ஹவுதி - சவூதி இடையே ஏற்படும் தாக்குதலே உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹவுதி அமைப்பினர், ஏமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோகா (Mocha) துறைமுக நகரம், பாப் அல்-மண்டேப் நீரிணையை ஒட்டியுள்ள துபாப் (Dhubab) நகரம், செங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள மிக முக்கியமான மயூன்/பெரிம் தீவையும் கைப்பற்றி அதன்மூலம் சவூதியையும் தாக்கி வருகின்றனர். இதைச் சமாளிக்க சவூதி முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அதன் நட்பு நாடுகளும் கைவிட்டுள்ளன. இதற்கிடையே, ஏமனில் நடைபெறும் உள்நாட்டுப் போரால் அங்குள்ள மக்கள் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை (UNHCR) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, ஏமனில் அரசுப் படைகளுக்கும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே தீவிரமடைந்துள்ள புதிய போரினால் 1,00,000க்கும் அதிகமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர்.
தாய் மண்ணைவிட்டு வெளியேறிய பெரும்பாலான மக்கள், ஏமனின் பிற பாதுகாப்பான பகுதிகள், பாலைவன எல்லைகளில் அடிப்படை உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றித் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், இன்னும் பலர் பாப் எல்-மண்டேப் ஜலசந்தியைக் கடந்து ஆப்பிரிக்க நாடுகளான ஜிபூட்டி, சோமாலியா போன்ற பகுதிகளுக்கு ஆபத்தான படகுகளில் தப்பிச் செல்ல முயல்கின்றனர்.
மோதல்களை உடனே நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏமனில் கட்டுப்படுத்த முடியாத அளவிலான மனிதநேயப் பேரழிவு ஏற்படும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும், ஏற்கெனவே நாட்டின் 80%-க்கும் அதிகமான மக்கள் வறுமையின் பிடியில் இருக்கும் சூழலில், இந்த புதிய இடப்பெயர்வு மிகப்பெரிய பஞ்சத்திற்கும் பட்டினிக்கும் வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை (UNHCR) எச்சரித்துள்ளது.

