”உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்” - அதிபர் ட்ரம்ப்
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் ராணுவ விமானத் தளங்கள் மீது உக்ரைன் முதன்முறையாக உக்கிரமான தாக்குதலை நடத்தியது. உக்ரைன் ராணுவம், ஸ்பைடர்வெப் எனக் குறிப்பிடப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையின் கீழ், ரஷ்யாவின் உள் பகுதிகளில் உள்ள இர்குட்ஸ்க், முர்மான்ஸ்க், இவானோவோ, ரயசான் மற்றும் அமூர் ஆகிய ஐந்து ராணுவ விமானத் தளங்களை இலக்காகக் கொண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற ரஷ்யாவின் TU-95, TU-22M, A-50 போன்ற முக்கிய ராணுவ விமானங்கள் உள்பட 41 விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. தவிர, கிரிமியாவிற்குச் செல்லும் ரஷ்யாவின் பாலத்தை நீருக்கடியில் வெடிபொருட்களால் தாக்கியதாக உக்ரைன் தெரிவித்திருந்தது. உக்ரைனின் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, ரஷ்யா பதிலடி கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ட்ரம்ப், "விளாடிமிர் புதினுடன் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் பேசினேன். ரஷ்ய விமானத் தளங்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதித்தோம். உக்ரைனின் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப் போவதாக ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். அதனால் இருதரப்புக்கும் இடையே தற்போதைக்கு போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.