முதல்முறையாக கிராமி விருது பெற்ற தலாய் லாமா.. எதிர்ப்பு தெரிவித்த சீனா!
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தனது 90-ஆவது வயதில் முதல்முறையாக கிராமி விருதை (GrammyAward) வென்றுள்ளார். அதேநேரத்தில், தலாய் லாமாவுக்கு வழங்கப்பட்ட கிராமி விருதுக்கு சீனா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தனது 90-ஆவது வயதில் முதல்முறையாக கிராமி விருதை (GrammyAward) வென்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிப்ரவரி 1இல் நடைபெற்ற 68ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில் தலாய் லாமாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 'Meditations: TheReflections Of His Holiness The Dalai Lama' என்ற தியானம் தொடர்பான அவரது பேச்சு-மொழி ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், கதை சொல்லுதல் மற்றும் வர்ணனை" பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்றது குறித்து, “இதை நான் தனிப்பட்ட ஒன்றாகப் பார்க்கவில்லை. மாறாக நமது பகிரப்பட்ட உலகளாவிய பொறுப்பை அங்கீகரிப்பதாகவே பார்க்கிறேன். எட்டு பில்லியன் மனிதர்களின் கூட்டு நல்வாழ்வுக்கு அமைதி, இரக்கம், நமது சுற்றுச்சூழலுக்கான அக்கறை மற்றும் மனிதகுலத்தின் ஒற்றுமை பற்றிய புரிதல் அவசியம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். இந்த கிராமி அங்கீகாரம் இந்த செய்திகளை இன்னும் பரவலாகப் பரப்ப உதவும் என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தலாய் லாமாவுக்கு வழங்கப்பட்ட கிராமி விருதுக்கு சீனா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், மதத்தின் பெயரால் தலாய் லாமா பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

